Dharmendra Pradhan MK Stalin News: நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் இருப்பது குறித்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்களின் கடுமையான கூச்சல், அமளிக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் பேசினார்.
Dharmendra Pradhan MK Stalin: தர்மேந்திர பிரதான் பேசியது என்ன?
அப்போது அவர்,"அவர்கள் (திமுகவினர்) தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உண்மையாக இல்லை. அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழித் தடைகளை உருவாக்குவது மட்டுமே அவர்களின் (திமுகவின்) வேலை. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் வம்பு செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்" என திமுகவை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.
"தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இந்த (PM SHRI) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் உட்பட பல பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன" என்றும் பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான்,"PM SHRI புரிந்துணர்வில் அவர்கள் கையெழுத்திட இருந்தார்கள். ஆனால் திடீரென்று ஒரு சூப்பர் முதல்வர் தலையிட, அவர்கள் யூ-டர்ன் எடுத்துவிட்டார்கள். அவர்கள் அரசியல் செய்ய விரும்புகிறார்கள்" என்றார். இன்று மார்ச் 10ஆம் தேதி மார்ச் மாதம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன என்ற தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு அரசு PM SHRI புரிந்துணர்வில் கையெழுத்திட கால அவகாசம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
Dharmendra Pradhan MK Stalin: அவையில் கடும் அமளி
தர்மேந்திர பிராதன் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவை மதியம் 12 மணிவரை அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு பின் அவை தொடங்கியது. அப்போது மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, அமைச்சரின் பேச்சு கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியதாகவும், காயப்படுத்தியதாகவும் வருத்தப்பட்டார்.
கல்வித் திட்டங்களின் கீழ் மாநிலத்திற்கு நிதியை விடுவிக்கக் கோரி, தானும், தமிழக கல்வி அமைச்சருடன் சேர்ந்து, பிற திமுக எம்.பி.க்களும் தர்மேந்திர பிரதானைச் சந்தித்ததாகவும் கனிமொழி கூறினார். "புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எங்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று நாங்கள் கூறினோம்" என கனிமொழி பேசியிருந்தார்.
Dharmendra Pradhan MK Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் அவரது X பக்கத்தில்,"தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?... தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?...
Dharmendra Pradhan MK Stalin: நிதியை விடுவிக்க முடியுமா, முடியாதா - ஸ்டாலின்
புதிய தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே...? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!.
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா, முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்" என கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Dharmendra Pradhan MK Stalin: அண்ணாமலையின் 3 கேள்விகள்
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,"பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். முதல் கேள்வி, திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிராதன் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி, மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?. உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?...
மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே, இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள் - திருமாவளவன் பேச்சு!
மேலும் படிக்க | விஜயகாந்திற்கு நான் தாயாக இருந்தேன் - பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









