)
பலருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு ஆகும். வீடு இல்லை என்றாலும் சொந்தமாக ஒரு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஒரு சொத்து வாங்குவது என்பது ஒருவரின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இந்த முதலீட்டைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது கிரையப் பத்திரம் (Sale Deed) ஆவணமாகும். இந்த பத்திரத்தில் ஏற்படும் சிறு தவறுகள் கூட, எதிர்காலத்தில் பெரிய சட்ட சிக்கல்களுக்கும், உரிமை பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, கிரைய பத்திரம் எழுதுவதின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கு சரியான ஆவண எழுத்தரை தேர்வு செய்வது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
கிரையப் பத்திரத்தின் முக்கியத்துவம்
ஒரு சொத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் ஆகும். பட்டா, சிட்டா போன்றவை வருவாய் துறை பதிவேடுகளில் உரிமையாளர் பெயரை காட்டினாலும், சொத்தின் மீதான முழுமையான உரிமையை உறுதி செய்வது கிரைய பத்திரமே ஆகும். ஒரு சொத்தை விற்பவர், வாங்குபவர் குறித்த முழு விவரங்கள், சொத்து விற்பனையாளருக்கு எப்படி கிடைத்தது (மூலப் பத்திரம்), சொத்தின் நான்கு எல்லைகள், சரியான அளவு மற்றும் விற்பனை தொகை ஆகியவை பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
சொத்துப் பரிமாற்றத்திற்கான பத்திரங்களை தயாரிப்பதில் பதிவுத்துறையால் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழகத்தில், பதிவுச் சட்டம், முத்திரைச் சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படைகளை அறிந்து, தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 3,000க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர். இவர்களே பத்திரங்களை முறைப்படி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
ஆவண எழுத்தாளர்!
நீங்கள் சொத்து வாங்கும் சார்-பதிவாளர் அலுவலக பகுதியில் நீண்டகாலமாக பணியாற்றும், அனுபவம் வாய்ந்த மற்றும் உரிமம் பெற்ற ஆவண எழுத்தரை தேர்வு செய்ய வேண்டும். இது அந்த பகுதியின் நிலவரம் மற்றும் நடைமுறைகளை அவர் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யும். சமீபகாலமாக, சில வழக்கறிஞர்களும் ஆவணங்களை எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். உரிமம் பெற்ற ஆவண எழுத்தர், கல்வி தகுதியில் வழக்கறிஞராக இருப்பதில் தவறில்லை. ஆனால், வழக்கறிஞர் தொழிலை செய்யும் ஒருவர், ஆவண எழுத்தராகவும் செயல்படும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக, சில சமயங்களில் பத்திரங்கள் மிகவும் சுருக்கமாக முடிக்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
"வேகமாக வேலையை முடிக்கிறார்" என்பதற்காக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டாம். பத்திரத்தில் அனைத்து விவரங்களும் துல்லியமாகவும், தெளிவாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சொத்தின் வரலாறு, வாரிசு விவரங்கள், எல்லைகள் போன்றவை சரியாக குறிப்பிடப்படாவிட்டால், அதுவே பின்னாளில் வில்லங்கமாக மாற வாய்ப்புள்ளது. ஒரு நல்ல கிரைய பத்திரம் என்பது, சொத்து யாரிடமிருந்து, எப்படி தற்போதைய விற்பனையாளருக்கு வந்தது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அளவுகள் மற்றும் மதிப்பை குறிப்பிடும்போது, எதிர்காலத்தில் குழப்பம் வராத வகையில் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
சொத்து வாங்குவதில் காட்டும் அவசரத்தைவிட, அதற்கான ஆவணங்களைத் தயாரிப்பதில் அதிக கவனம் தேவை. அனுபவம் வாய்ந்த, உரிமம் பெற்ற ஆவண எழுத்தர் மூலம், அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு தெளிவான கிரைய பத்திரத்தை எழுதுவதே உங்கள் சொத்துக்கான உண்மையான மற்றும் நிரந்தரப் பாதுகாப்பாகும். இது நிகழ்கால முதலீட்டை பாதுகாப்பதோடு, எதிர்கால சந்ததியினரின் உரிமையையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ