Hosur Airport Plan, Tamil Nadu Government: தமிழ்நாட்டின் முக்கியத் தொழில் நகரமாக ஓசூர் விளங்குகிறது. தொழில்கள் சிறக்க அங்கு மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், முன்னெடுப்புகளே இதற்கு காரணமாகவும் அமைந்தது. எனவே, மேலும் ஓசூர் நகரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச்செல்லும் வகையில் தமிழ்நாடு முக்கிய திட்டம் ஒன்றை அறிவித்தது.
Hosur Airport Plan: அனுமதி மறுப்பு
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. ஆனால், சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு மீண்டும் ஒருமுறை தகர்க்கப்பட்டிருக்கிறது. 'பாதுகாப்பு காரணங்கள்' மற்றும் 'வான்வெளிப் பிரச்சனை' எனக் கூறி மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இத்திட்டத்திற்கு சமீபத்தில் அனுமதி அளிக்க மறுத்திருந்தது. இது இத்திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
Hosur Airport Plan: பாதுகாப்பு காரணமா? அரசியல் காரணமா?
ஆனால், இதில் பாதுகாப்பு காரணங்கள், வான்வெளிப் பிரச்னைகள் ஆகியவற்றை தாண்டி இதன் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் காரணங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு நிராகரித்ததன் பின்னணியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலையீடு இருப்பதாகப் பேசப்படுகிறது. ஓசூர் விமான நிலையம் வருவதைத் தடுப்பதில் அவருக்கு என்ன லாபம்? அண்டை மாநில அரசியல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படிப் பாதிக்கிறது? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Hosur Airport Plan: சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன லாபம்?
ஓசூர் நகரம் தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை முதல் ஓலா வரை பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஓசூரில் மையம் கொண்டுள்ளன. இங்கு சர்வதேச விமான நிலையம் அமையும்பட்சத்தில், அது அப்பகுதியின் வளர்ச்சி பன்மடங்கு உயரக்கூடும் என்று தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது. ஆனால், பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் (HAL) நிறுவனம் ஓசூரின் வான்வெளியை அதிகம் பயன்படுத்துகிறது. எனவே, இங்கு ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் அதன் வான்வெளியைப் பாதிக்கும் என்பதால் பாதுகாபபு அமைச்சகம் அனுமதி தர மறுத்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுதான் உண்மையான காரணமா? அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் ஒளிந்திருக்கிறதா என்பதை தேடிப்பார்த்தால், ஆந்திராவின் 'குப்பம்' விமான நிலையத் திட்டம் நம் கண்ணுக்கு புலப்படுகிறது.
Kuppam Airport Plan: குப்பம் விமான நிலையம்
மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதிதான் 'குப்பம்'. இந்த குப்பம் நகரம் ஓசூரில் இருந்து வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. பாஜக அரசுக்கு சந்திரபாபு நாயுடுவின் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, குப்பத்தில் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க சந்திரபாபு நாயுடு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறாராம். அதுவும் குப்பம் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கிவிட்டதாம்.
Hosur Airport Plan: சந்திரபாபு நாயுடுவின் ஐடியா
இங்கேதான் விஷயமே இருக்கிறது. ஓசூருக்கும் குப்பத்திற்கும் இடைவெளி மிகக் குறைவாக இருக்கிறது. ஒருவேளை ஓசூரில் சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டால், குப்பம் விமான நிலையத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். சரக்கு போக்குவரத்தும், முதலீடுகளும் இயல்பாகவே ஓசூரை நோக்கி நகரும். எனவே, ஓசூர் விமான நிலையம் அமையாமல் தடுத்தால் மட்டுமே குப்பம் விமான நிலையம் வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்பது சந்திரபாபு நாயுடுவின் ஐடியா.
தற்போதைய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியதாகிறது. இந்த அதிகாரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, சந்திரபாபு நாயுடு ஆந்திராவிற்குப் புதிதாக ஏழு விமான நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Hosur Airport Plan: நகர்த்தப்படும் அரசியல் காய்கள்
மத்தியில் கூட்டணி செல்வாக்கை பயன்படுத்தி, ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு, அதே சமயம் குப்பம் விமான நிலையப் பணிகளை அவர் துரிதப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பெங்களூரு மற்றும் ஓசூரைச் சுற்றியுள்ள சரக்கு போக்குவரத்தை ஆந்திரா பக்கம் திருப்பவும் அவர் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, அதை அப்படியே ஆந்திரா பக்கம் திருப்பிவிட மத்திய பாஜகவை கையில் வைத்துக்கொண்டு சந்திரபாபு தனி கணக்கையே போட்டுவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | ஓசூர் விமான நிலையம்: வருமா...? வராதா...? - மத்திய அரசின் முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









