)
Reason Behind Karur Stampede: கரூரில் நேற்றிரவு நடந்த அசம்பாவிதம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. சுமார் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் 40 பேருக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 40 பேரில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். மீதம் இருந்த 39 பேரும் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கரூரில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், அதிகாரிகள் கரூரில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட செயலாளர்களும் தற்போது தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது எப்படி?, இதற்கு முன் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருந்த நிலையில் கரூரில் ஏன் இந்த விபத்து நிகழ்ந்தது?, குறுகலான சாலையில் நிகழ்வு திட்டமிடப்பட்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டதா? ஆம்புலன்ஸ்களுக்கு தொண்டர்கள் வழிவிடாமல், அதில் யாராவது இருக்கிறார்களா என தடைசெய்யப்பட்டதா? போன்ற எண்ணற்ற கேள்விகளும், சந்தேகங்களும் பலருக்கும் இருந்து வருகிறது.
ஆனால் இதுகுறித்து விசாரணை செய்து தீவிரமாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று கரூரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வீசியதே முக்கிய காரணம் என தகவல்கள் கூறுகின்றன. விஜய் நேற்றிரவு சுமார் 7.15 மணிக்கு தனது பேச்சை தொடங்கினார். அவர் பேச தொடங்கியதில் இருந்து பலமுறை பேச்சை நிறுத்தி ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, அவரது பிரச்சார வாகனத்தில் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் பலரும் மயக்கமடைந்ததால் அதை பார்த்தும் பேச்சை நிறுத்தி, தனது பிரச்சார வாகனத்தில் இருந்து முதலில் ஒரே ஒரு தண்ணீர் பாட்டிலை கூட்டத்தை நோக்கி வீசினார். தொடர்ந்து சில பாட்டில்களையும் மக்களை நோக்கி வீசினார். அதற்கு பின்னரும் சில நிமிடங்கள் பேச்சை தொடர்ந்தார். அவரது பிரச்சார வாகனத்தை சுற்றியிருந்த பலரும் மீண்டும் மீண்டும் தண்ணீர் கேட்க, விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்துகொண்டு ஆதவ் அர்ஜூனா மற்றும் பாதுகாவலர்களும் பலரும் தண்ணீர் பாட்டிலை வீசினர்.
தண்ணீர் பாட்டிலை வீசியதால் அதனை பிடிக்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த பாட்டில்களை எடுக்க சிலர் முண்டியடித்ததால் பலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்ததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் இதனால் கூட உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் காலை 11 மணிமுதல் மக்கள் வேலுச்சாமிபுரத்தில் கூடியதாலும், அங்கு தண்ணீர் மற்றும் உணவு அருந்தாமல் இருந்ததாலும் கூட பலரும் கூட்டத்தில் மயக்கமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை. எனவே, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஒரு நபர் ஆணையம் இதுகுறித்து தனது அறிக்கையில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ