Kadambur Raju: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தியது அதிமுகவின் வரலாற்றுப் பிழையாகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு அவர் விளக்கமும் அளித்துவிட்டார்.

ADMK Ex Minister Kadambur Raju: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி, மே 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையொட்டி, கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ (Kadambur Raju) கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக மற்றும் பாஜக கூட்டணி (ADMK BJP Alliance) நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமைந்திருந்தால் 40க்கு 40 வெற்றி பெற்று இருக்கலாம் என்று எனக்கு முன்பு பேசியவர்கள் சிலர் கூறினர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. திமுக 40க்கு 40இல் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் ஆடுகிற ஆட்டத்திற்கு அளவே இல்லை.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்ல வேண்டிய நிலையில் திமுக உள்ளது. நான் வேறு யாரும் மருத்துவமனைக்கு சென்றதை சொல்லவில்லை. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்டு உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கின்றன. இந்தியாவை வல்லரசாக உருவாக்கிய ஆற்றல்மிகு பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார், அவரது பார்வை தமிழ்நாட்டில் விழுந்திருச்சு...
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திமுக ஆட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில்தான் சரியான நேரத்தில் நல்ல முறையில் கூட்டணி அமைந்திருக்கிறது. திமுகவிற்கு மாற்று அதிமுகதான் என்பது மக்கள் கொடுத்த தீர்ப்பு.
அதிமுக இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வரின் நிலைமையை பார்த்தேன். தன்னிலையில் அவர் இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டு தற்போது அமைத்து விட்டீர்களே என்று சட்டப்பேரவையில் முதல்வர் கேள்வி எழுப்பினர். அவரின் பதட்டத்தை பார்த்தேன்.
திமுக பொருளாதார வளர்ச்சியாக இருப்பதற்கு பாஜகதான் காரணம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். 1998ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்து விட்டு, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது போல இடையில் வந்த ஒரு சாமி சுப்பிரமணி சாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகிவிட்டது. திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜகதான், இன்றைக்கு பாஜகவை தீண்ட தகாத கட்சியாக திமுக பார்க்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் நின்றால் ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும். தெரிந்துதான் தேர்தலை சந்தித்தோம், அது அன்றைய கால சூழ்நிலை. திமுக ஆட்சியை விட்டு இறங்கியதும் வீட்டுக்கு போக மாட்டார்கள். திஹார் சிறைக்குத்தான் போவார்கள். மக்கள் தெளிவாகிவிட்டனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி வெல்ல வேண்டும், ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் மனதில் வந்துவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் புத்திக் கூர்மையுடன் திறமையான அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது, தீப்பெட்டி பற்றி பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறி ஜிஎஸ்டியை குறைத்தார். அதன் பிறகு தான் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது. இல்லை என்றால் என்றைக்கும் தொழில் மூடப்பட்டிருக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தினால் பிரளயம் வந்தது போல் உள்ளது. திமுகவினால் நிம்மதியா தூங்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், திடீரென முதல்வர் உடல்நிலை குறைவு என்று மருத்துவமனைக்கு சென்று விட்டார். தமிழக முதல்வர் பூரண நலம் பெற்று வர வேண்டும், அவர் ஜெயிக்க வேண்டும். ஆனால் அவர் கட்சி தோற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்ந்திருப்பதை சட்டமன்றத்தில் இருந்து அவர் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
உலக நாடுகளின் பார்வையில் இருக்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். அடிக்கடி வெளிநாடு போவதாக பிரதமர் நரேந்திர மோடி மீது சிலர் குறை கூறுகின்றனர். அவருக்கென்ன குடும்பமா இருக்கு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா போக, நாட்டுக்காக அர்ப்பணித்தவர். நாட்டுக்காக சொந்த குடும்பம் அமைக்காமல் நாட்டுக்காக வாழ்ந்த நிறைய தலைவர்கள் பாஜகவில் உள்ளனர்.
ஒரு ஆப்ரேஷன் சிந்தூர் போதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கார்கில் போர் மூலமாக இந்தியாவை தலை நிமிர செய்தார். தலைமை பண்பில் இருப்பவர்களுக்கு ஆற்றல், அறிவு, அனுபவம் வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிப் பெற்றவர்தான் பிரதமர் நரேந்திர மோடிதான். திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துக் கொண்ட போது சிரித்த சிரிப்பு தெய்வீக சிரிப்பு.
அந்த தெய்வீகச் சிரிப்புக்கு காரணம் 2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெல்லும் என்ற கருத்துக் கணிப்பு வரப் போய்தான் திமுக இன்று வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி ஓரணியில் தமிழ்நாடு என்று உட்கார வைக்கின்றனர். உங்களுடன் ஸ்டாலின் என்று கூறுகிறார். இதற்கு முன்னாடி யார் கூட இருந்தார் என்று தெரியவில்லை. யார் கூட இருந்தார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நாம் பதில் கூறவும் முடியாது, அவர்தான் கூற வேண்டும். யார் கூட இருந்தார் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, இதனை நாம் வெற்றியாக மாற்ற வேண்டும்" என்றார்.
கடம்பூர் ராஜூ பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து, தான் பேசியது தவறுதலாக அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருக்கிறது என விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2026 தேர்தல் களத்திற்கு முதல்முதலாக வந்துள்ளது அதிமுக தான். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எங்களை வாழ வைத்த தெய்வங்கள். அதிமுகவின் கடைக்கோடி தொண்டர் வரை அந்த உணர்வோடுதான் மறையவில்லை, எங்கள் உள்ளத்தோடும் உதிரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர். 1998ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் யோசித்து நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலாக முடிவெடுத்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார்.
அதில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றதன் காரணத்தினால்தான் பாஜக மத்தியில் முதல்முறையாகஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு தமிழகத்தின் நலன் கருதி சில பிரச்சனைகளை மையமாக வைத்து மத்திய அரசில் இருந்து வெளியே வந்துவிட்டோம். அதிமுக வெளியே வந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக வாஜ்பாய் தலைமையிலான அரசியல் பங்கேற்று அவர்களை வளப்படுத்திக் கொண்டனர். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
திமுக, பாஜக உடன் சேர்ந்தால் நல்ல கட்சி. நாங்கள் ஒன்று சேர்ந்தால் தீண்ட தகாத கட்சியா என்றுதான் கருத்து கூறினேன். எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் தவறுதலாக அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருக்கிறது" என்றார்.
முன்னதாக, கூட்டத்தில் அதிமுக பாஜகவினர் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, பாஜகவை சேர்ந்த தினேஷ் ரோடி என்பவரும் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது, மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருந்த தினேஷ் ரோடி எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர். அன்றில் இருந்து அதிமுக நிர்வாகிகளும், தினேஷ் ரோடி அணியினரும் எதிரெதிராக இருந்தனர். இந்நிலையில் கூட்டணி அமைந்தால் இனிப்பு கொடுத்து சமாதானம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ