)
Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமை தொகை மே 15 அன்று வரவு வைக்கப்படாது என்றும் விரைவில் ரூ. 1000 அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் நேற்று (மே 14) அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பின. இந்த நிலையில், இன்று (மே 15) வெள்ளிக்கிழமை அனைத்து மகளிர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக 1.15 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழக்கம்போல் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது. அதேசமயம் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், அவர் கொடுத்த வாக்குறுதி மகளிருக்கு ரூ. 2500 வழங்கப்படும் என கூறியதை நிறைவேற்றுவாரா என்ற கேள்வியும் இருந்தது.
சட்டமன்றத்திலும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அதேபோல் திமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு முதல்வர் விஜய், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நல திட்டங்களை அப்படியே தொடரும் என தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் மகளிர் உரிமை தொகை இம்மாதம் வரவு வைக்கப்படாது என்றும் விரைவில் அனைவருக்கும் உதவி தொகை வழங்கப்படும் என்றும் கூறி இருந்தார். அதேசமயம் அவர் கொடுத்த ரூ. 2500 வாக்குறுதியை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இன்று (மே 15) காலை பெண்கள் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.