)
Kalaignar Maglir Urimai Thogai : பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் கொடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. அறிஞர் அண்ணா பிறந்ததாளில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசே கொடுக்கிறது. அதுவும் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விதிமுறைகள் என்ன, எப்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள், எந்த அடிப்படையில் பயனாளிகள் நிராகரிக்கப்படுகிறார்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை எல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு அரசு கொடுக்கும் காலவகாசத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்தவகையில் இப்போது தமிழ்நாடு முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க முடியாது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகள்
யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு கார்டு வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 5 ஏக்கர் நன்செய் நிலங்கள், 10 ஏக்கர் புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவி இல்லாத குடும்பங்களில் 21 வயது பூர்த்தியடைந்த பெண்கள் இருந்தால் கூட இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
திருநங்கைகள் தலைமையில் குடும்பம் இருப்பின் அவர்களும் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத பெண்கள் தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். 2.5 லட்சத்துக்கும் குறைவா ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம். ஏழை எளிய குடும்பங்களைச் செர்ந்தவர்களின் வீட்டில் யாரேனும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தாலும், ஓய்வூதியம் பெறாத மற்ற பெண்கள் இருப்பின் அவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஹெச்ஐவி, முதுகு தண்டுவட நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிற திட்டங்களில் உதவி பெற்றாலும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கக்கூடாது?
மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளுக்குள் வராதவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. முன்னாள், இந்நாள் மத்திய மாநில அரசு ஊழியர்கள் குடும்பத்தினர், 2.5 லட்சத்துக்கும் மேலாக ஓய்வூதியம் பெறும் முன்னாள்அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது. சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது. வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்கள் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
எப்போது பணம் வரும்?
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பித்த உடனே பணம் வராது. விண்ணப்பதாரரின் தகவல்கள் குறித்து அரசு பல்வேறு வழிகளில் ஆய்வு செய்யும். பொருளாதாரம், நில உடமை உள்ளிட்ட தகவல்களை விஏஓ மூலம் உறுதி செய்யும். அதன்பின் வங்கி கணக்கு தகவல்கள் ஆகியவற்றை வங்கி கணக்கு புத்தக்கம், ஆதார் மற்றும் தொலைபேசி எண்கள் மூலம் உறுதி செய்யும். இந்த விசாரணை எல்லாம் முடிந்த பின்னர் புதிய பயனாளிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை முடிவு செய்து அவர்களை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு சேர்க்கும்.
இந்த தகவல் பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, பணம் அனுப்பும் தேதியை அரசு அறிவிக்கும். அந்தவகையில் இப்போது விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனைகள் முடிந்த பின்னரே ரூ.1000 வரும் தேதியை அரசு அறிவிக்கும். எப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1000 கொடுக்கலாம் என அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்படி எடுக்கும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகபட்சம் செப்டம்பர் மாதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ