இந்திய சமூகத்தில் மாறிவரும் உறவுமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், திருமண உறவை தாண்டிய தொடர்புகள் குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணமானவர்கள் மற்றும் உறவில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் ரகசியமாகப் பழக உதவும் டேட்டிங் செயலியான 'ஆஷ்லே மேடிசன்' (Ashley Madison) நடத்திய ஆய்வில், இந்தியாவின் 'கள்ளக்காதல் தலைநகரம்' என்ற அதிர்ச்சியூட்டும் பெயரை தமிழகத்தின் காஞ்சிபுரம் பெற்றுள்ளது. பட்டுச் சீலைகள் மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குப் பெயர் பெற்ற ஒரு ஆன்மீக நகரம் டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
'ஆஷ்லே மேடிசன்' செயலி, தனது தளத்தில் ஜூன் 2025 வரை பதிவு செய்த புதிய பயனர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 17-வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம், இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இது பெருநகரங்கை தாண்டி சிறு நகரங்களையும் இது போன்ற உறவுகள் அதிகரித்து வருவதையும், உறவுமுறைகள் குறித்த மனநிலைகள் மாறி வருவதையும் இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஆய்வின் முக்கிய அம்சங்கள்
இந்த பட்டியலில் பெருநகரங்களை விட சிறு நகரங்கள் ஆதிக்கம் செலுத்துவது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் 20 இடங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் (NCR) மட்டும் 9 இடங்களைப் பிடித்து, திருமணத்தை மீறிய உறவுகளில் இப்பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதைக் காட்டுகிறது. மத்திய டெல்லி, காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மிகப்பெரிய ஆச்சரியமாக, இந்தியாவின் நிதித் தலைநகரமும், எப்போதும் பரபரப்பாக இயங்கும் நகரமுமான மும்பை, முதல் 20 இடங்களுக்குள் கூட வரவில்லை. இது, பெருநகர வாழ்க்கையின் அழுத்தம் மட்டுமே இத்தகைய உறவுகளுக்குக் காரணம் என்ற பொதுவான கருத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. காஞ்சிபுரத்தைத் தவிர, ஜெய்ப்பூர், ராய்கர் (சத்தீஸ்கர்), காமரூப் (அசாம்), சண்டிகர் போன்ற பிற சிறிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது, இணையம் மற்றும் டேட்டிங் செயலிகளின் பரவலான பயன்பாடு, மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?
இந்தத் தரவுகள் குறித்து ஆஷ்லே மேடிசன் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி பால் கீபிள் கூறுகையில், "இந்த செயலியில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 55% பேர், திருமணத்தை மீறிய உறவில் தாங்கள் ஈடுபட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது நவீன உறவுகளை மறுவரையறை செய்வதிலும், தங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தரும் என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் இந்தியா முன்னணியில் இருப்பதை காட்டுகிறது" என்றார்.
வேலை அழுத்தம், வேலை நிமித்தமாக மேற்கொள்ளப்படும் நீண்ட நேரப் பயணம் மற்றும் குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பரவலான வீட்டில் இருந்து வேலை செய்யும் (Work From Home) முறை ஆகியவை இந்த உறவுகள் அதிகரிக்க முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். வீட்டில் இருந்து வேலை செய்வது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையேயான கோடுகளை மங்கச் செய்து, ஆன்லைன் மூலம் புதிய உறவுகளைத் தேட சிலருக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த ஆய்வு, இந்திய சமூகத்தில் மறைமுகமாக நிகழ்ந்து வரும் மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு சிறிய துளியை மட்டுமே காட்டுகிறது. பாரம்பரிய இடங்களுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் போன்ற ஒரு நகரம் இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது பெரும் கேள்விகளை எழுப்பி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









