M.K. Stalin Speech : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுகவினருக்கு மடல் ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கிறார். அதில், தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.
இன்று பஞ்சாபும், தெலங்கானாவும் உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், “தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும்” எனச் சட்டமாக நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆட்சி மொழி – அலுவல் மொழி என்ற வகையில் இந்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலை 1965-ஆம் ஆண்டு இந்தியாவில் உருவானபோது, முதலில் எச்சரித்த மாநிலம் தமிழ்நாடுதான்.
எச்சரித்தது மட்டுமல்ல, 'தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக' என உச்சரித்தபடியே தன் உடலுக்குத் தானே தீ வைத்துக்கொண்டு மொழிகாக்கும் போரில் உயிர் ஈந்த தியாக வரலாறும் தமிழ்நாட்டிற்குரியது. முத்தமிழறிஞர் கலைஞரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தனர். அதே சட்டத்தில் முரசொலி மாறன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா உள்பட கழகத்தினர் களம் கண்டனர். சிறை சென்றனர். தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி உணர்வுத் தீ, ஆந்திரா தொடங்கி அசாம் வரை பரவியது. அதன்பிறகே, இந்திய ஒன்றிய அரசில் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக - அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைச் செய்து கொள்ளட்டும்” என்று அறைகூவல் விடுத்தார். 1971-ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழக மாணவர் மாநாடு நடைபெற்றது.
அழைப்பிதழின் உரையாற்றுவோர் பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டாலும், மாநாட்டின் எழுச்சியால் உந்தப்பட்டு, “மொழிக்காக, போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம்” என்று நான் முழங்கினேன். உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம் - மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. "ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்!” என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Seeman: முதல்வர் ஆசையில் சீமான்.. விசாரணைக்கு பிறகு சீமான் சொன்னது என்ன?
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: மாணவர்களுக்கு 1000 ரூபாய் - வருகிறது நல்ல செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata









