TASMAC Raid Case Latest News Updates: டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான நிறுவனங்களின் அலுவலகம் உள்பட டாஸ்மாக் சார்ந்த இடங்களில் அமலாக்கத் துறை (Enforcement Directorate) சமீபத்தில் சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் சுமார் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
TASMAC Raid Case: வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
அந்த வகையில், டாஸ்மாக் (TASMAC) தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, தமிழ்நாடு அரசும் (Tamil Nadu Government), டாஸ்மாக் நிர்வாகமும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
TASMAC Raid Case: 'ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது'
தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல்கள் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல.
நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாகத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அந்த விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது.
TASMAC Raid Case: இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை
சோதனை என்பது ஆரம்பக்கட்ட நடவடிக்கை தான். அதனால் டாஸ்மாக் நிர்வாகம் நிவாரணம் கோரி அமலாக்கத் துறையை நாடலாம். சோதனை உத்தரவில், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அது அவர்களின் கடமை. சோதனைக்கான உத்தரவு நகலை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை.
டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை நிர்ணயம், பார்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக 100 கேள்விகள் எழுப்பி வாக்குமூலங்கள் பதிவு செய்து கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது சம்மந்தமாக டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் குற்றச்சாட்டவில்லை.
TASMAC Raid Case: 'ஆதாரங்கள் உள்ளன'
சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக, அரசு யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டி உள்ளது. சட்டத்தின்படி தான் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வலுக்கட்டாயமாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூற முடியாது. திடீர் சோதனைகள் நடத்தும் போது, தகவல்கள் கசிவதையும், ஆதாரங்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க இதுபோன்று ஊழியர்கள் சிறைபிடிக்கபடுவது உண்டு.
அது துன்புறுத்தல் ஆகாது. சோதனையின் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு உணவு, ஓய்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இல்லாத இந்த குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது. சோதனை சட்டப்பூரவமாக தான் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
TASMAC Raid Case: தமிழ்நாடு அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி
மாநில போலீசார், சோதனை நடத்தும்போது தங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்ததில்லை. அதற்காக சோதனையின் போது விதிமீறல் இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது. தங்கள் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால் தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம். அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்தன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
அமலாக்கத் துறை விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க அரசு முயல்வது துரதிஷ்டவசமானது.
TASMAC Raid Case: இதில் கூட்டாட்சி தத்துவம் பொருந்தாது
டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது.
கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சில அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பு. அதற்காக நாட்டு மக்களின் பொருளாதார உரிமைகளுக்கு இணையாக கருத முடியுமா" என உத்தரவில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ.2,489 கோடி கூடுதல் வருமானம்... பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ