Murugan Pakthargal Manadu: முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.

Madurai Murugan Pakthargal Manadu: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு கண்காட்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூன் 21) சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முருகன் பாடல் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அப்போது அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேசுவர சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Murugan Pakthargal Manadu: இயேசு, அல்லாவை கும்பிட்டால் மத கலவரம் வராதா...?
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "ஆன்மீகமும் அரசியலும் கலந்தே தான் தமிழகத்தில் இருக்கிறது. யாரெல்லாம் ஆன்மீகத்திற்கு எதிராக பேசி ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்கள் தான் இப்போது மீண்டும் அதையே சொல்கிறார்கள். முருகனை தேவையில்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதை சொல்வதற்கு தான் இந்த மாநாடு.
முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? அவரவர் தெய்வத்தை உரிமையுடன் கும்பிட அரசியல் சாசனம் இடமளித்துள்ளது. அரசியல் கட்சிகள் கடவுளை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசனத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. அதற்காக, தமிழ்நாட்டில் முருகனை எவ்வளவு வேண்டுமானாலும் வசை பாடுவீர்களா?. அதை பார்த்துகொண்டு இருக்க வேண்டுமா?. கந்த சஷ்டி கவசத்தை எதற்காக வசை பாடினார்கள்?, அதற்காக தான் எல். முருகன் வேலை தூக்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனார்.
Murugan Pakthargal Manadu: இறைவனை வழிபட மொழி தேவையில்லை...
முருக பக்தர்களின் முதன்மையானவர் முத்துராமலிங்க தேவர். முத்துராமலிங்க தேவரை யாரெல்லாம் மதிக்கிறார்களோ அவர்கள் முருகனையும் வணங்குவார்கள். தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் மகாராஷ்டிராவில் கூட இதே போல ஒரு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும். நானும் உடன் இருப்பேன். இறைவனை வழிபடுவதற்கு மொழி தேவையில்லை. அது தமிழோ, சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும் சரியே" என்றார்.
Murugan Pakthargal Manadu: பிரம்மாண்ட மேடை அமைப்பு
மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூலை 22) மாலை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியில் நாள்தோறும் தமிழக முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தொடர்ந்து நான்கு நாட்களாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநாட்டின் மேடை பின்புறம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்ற முருகன் கோவில் மலை பின்னணியில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது.
Murugan Pakthargal Manadu: முக்கிய தலைவர்கள் வருகை... பலத்த பாதுகாப்பு
மாநாட்டிற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களிலும் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், வலதுசாரி தலைவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக மாநாட்டு பகுதி முழுவதிலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்திருந்த நிலையில், மாநாட்டு பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ