தூத்துக்குடி, பி.என்.டி. காலனி, 10வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி செலின். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்களில் இளையவர் நிபின் இம்மானுவேல். பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில், நிபின் இம்மானுவேல் தனது தாய் செலின் உடன் வசித்து வந்தார். நிபின் ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நிபின் இம்மானுவேலுக்கும், தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் சங்கர் என்பவரது மகள் கௌசிகாவுக்கும் இடையே சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது.
இவர்களது காதல் விவகாரம் கௌசிகாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு, நிபின் இம்மானுவேல் கௌசிகாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், கௌசிகாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர், நிபினுக்குத் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டதுடன், மகளின் தொடர்பைத் துண்டிக்க வற்புறுத்தியுள்ளனர்.
ஆனாலும், கௌசிகா தொடர்ந்து நிபினுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்து, "நான் உன்னைக் காதலிக்கிறேன், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அப்படியே திருமணம் நடந்தாலும் உன்னுடன் ஓடி வந்துவிடுவேன்" என்று கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கௌசிகாவுக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரை, கௌசிகாவும் நிபின் இம்மானுவேலும் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த பிறகும் கௌசிகா, நிபின் இம்மானுவேலைத் தொடர்பு கொண்டு, "என்னால் இப்போது வர இயலாது. கொஞ்சம் பொறுத்துக் கொள். நான் எனது கணவரிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு உன்னுடன் வந்து வாழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கௌசிகாவின் தந்தை சங்கர், சிப்காட் காவல் நிலையத்தில் நிபின் இம்மானுவேல் மீது புகார் அளித்துள்ளார். திருமணமான பின்பும் தனது மகளிடம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வருவதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் நிபின் இம்மானுவேலை விசாரணைக்கு அழைத்த சிப்காட் காவல் துறையினர், அவரது செல்போனில் இருந்த நிபின் மற்றும் கௌசிகா ஒன்றாக இருந்த ரகசியப் புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் அனைத்தையும் அழித்துள்ளனர். மேலும், "இனிமேல் அந்தப் பெண்ணுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்" என்று எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், நிபின் இம்மானுவேலை கௌசிகாவின் தந்தை சங்கர், கூண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எட்டு ஆண்டுகளாகக் காதலித்த பெண் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொண்ட விரக்தியினாலும், பெண் வீட்டார் மிரட்டித் தாக்கியதால் ஏற்பட்ட மன வேதனையினாலும் நிபின் இம்மானுவேல் பாதிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு, பி.என்.டி. காலனியில் உள்ள தனது வீட்டில், தனி அறையில் இருந்த நிபின், தலைக்கு அடிக்கும் ஹேர் டையைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இரவு முழுவதும் அறையிலிருந்து நிபின் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், நிபினின் நண்பர்களுக்குத் தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, நிபின் இம்மானுவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நிபின் இம்மானுவேலின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், நிபினின் மரணத்திற்கு காரணமான அவரது காதலி கௌசிகா, கௌசிகாவின் தந்தை சங்கர், மற்றும் தாக்கிய மூன்று பேர் உட்பட அனைவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.
எட்டு வருடக் காதல் தோல்வி மற்றும் மிரட்டல் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உதவி தேவைப்படுபவர்களுக்கான முக்கிய தகவல்:
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது மன அழுத்தத்தில் அல்லது தற்கொலை எண்ணங்களுடன் இருந்தால், தயவுசெய்து உதவிக்கு அழையுங்கள்.
(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









