)
Manickam Tagore On DMK AIADMK Alliance Speculation: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட பின்னரும், அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. 108 இடங்களில் வென்ற தவெகவும் ஆட்சியமைக்க தட்டுத்தடுமாறி வருகிறது.
தவெகவுடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்திருக்கிறது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத காங்கிரஸ் கட்சி ஆளுநரை எதிர்த்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது.
அப்படியிருக்க தவெகவின் 107 எம்எல்ஏக்கள் (விஜய் 2 தொகுதிகளில் வெற்றி), காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 112 பேரின் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு இருக்கிறது. 118 மெஜாரிட்டி வேண்டும் என்பதால் இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவைப்படுகிறது.
விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 என மொத்தம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக கோரியுள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் இன்று தனித்தனியே தவெக உடன் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இன்று மதியம் அல்லது மாலைக்குள் தவெக கூட்டணியில் இணைவது குறித்த முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| விஜய் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கை | 118 |
| தவெக (விஜய் 1 தொகுதி தவிர) | 107 |
| காங்கிரஸ் (ஆதரவு உறுதி) | 5 |
| விசிக (ஆதரவு உறுதியாகவில்லை) | 2 |
| சிபிஐ (ஆதரவு உறுதியாகவில்லை) | 2 |
| சிபிஎம் (ஆதரவு உறுதியாகவில்லை) | 2 |
இது ஒருபுறம் இருக்க, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. நேற்று (மே 7) திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை, திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தால், தவெகவின் 107 எம்எல்ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், திமுக - அதிமுக இணைவது குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், விருதுநகர் மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் திமுகவை சாடி அவரது X தளத்தில் இன்று காலையில் பதிவிட்டுள்ளார்.
அதில், Out of Control, Full Control ஆக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார். அதாவது, வழக்கமாக திமுக தலைவர் ஸ்டாலின், 'டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் Out of control (கட்டுப்படாது) என்று குறிப்பிடுவார். அதை திமுக பாஜகவுக்கு கட்டுப்படாது என்றும் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், பாஜகவுக்கு கட்டுப்படாது (Out of Control) என சொல்லி வந்த திமுக, இப்போது பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் (Full Control) உள்ளது என மாணிக்கம் தாகூர் திமுகவை மறைமுகமாக சாடியுள்ளார்.
Out of control
— Manickam Tagore .மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 8, 2026
Becomes
Full control.
அவரின் இந்த பதிவை புரிந்துகொள்ள இன்று காலையில் மாணிக்கம் தாகூர், திமுகவை சாடி பதிவிட்ட மற்றொரு பதிவையும் கவனிக்க வேண்டும். அதில், "இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த, விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது" என திமுக - அதிமுக இணைய இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அந்த பதிவில், ஆர்எஸ்ஸ் மற்றும் பாஜகவின் பி-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்ப்பற்றவர் என்று சொல்ல முடியாது என்றும் 'நிலையான அரசு' என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி என்றும் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
— Manickam Tagore .மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 8, 2026
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல… https://t.co/3KZJNscFIr
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது என்றும் திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், யார் துரோகி என்றும் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார். மாணிக்கம் தாகூர் தேர்தலுக்கு முன்பிருந்தே திமுகவை கடுமையாக சாடி வந்தார். திமுக பாஜக உடன் மறைமுக உறவில் இருப்பதாக கூட ஒரு முறை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi: Congress MP Manickam Tagore says, "Things are evolving rapidly, and suddenly unexpected things are happening in Tamil Nadu. It has become the Nitish Kumar version of Tamil Nadu now. BJP has started to take control of Tamil Nadu, and the people who said that we are… pic.twitter.com/bbZZJR6HHr
— ANI (@ANI) May 8, 2026
2026 சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றது. ஆனால், தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது, பெரியளவில் தொகுதிகள் கிடைக்கவில்லை. எனவே, தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், மதச்சார்பற்ற கட்சியே ஆட்சியமைக்க வேண்டும் என்பதால் தவெக உடன் கூட்டணி அமைப்பதாகவும் காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது.
இதனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முறிந்தது. 2013ஆம் ஆண்டில் ஏற்கெனவே ஒருமுறை இந்த கூட்டணி பிரிந்தாலும், 2016 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கது.