)
Vaiko Wishes To CP Radhakrishnan: குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நிலையை காரணம்காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் ஆகஸ்ட் 21ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போது மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதையொட்டி, நாட்டின் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளரும், இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள வைகோ சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. அவர் நல்ல நண்பர்.
கோவை விமான நிலையத்திற்கு வாஜ்பாய் வந்தபோது, அவரைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, கோவை மக்கள் உங்களை பார்க்க விரும்புகிறார்கள் என சி.பி. ராதாகிருஷ்ணன் உடன் நானும் பேசினேன். இதனையடுத்து, வாஜ்பாய் கோவை மக்களை சந்தித்தார். 1998ஆம் ஆண்டு அதிமுக - பாஜக - மதிமுக கூட்டணி இருந்தபோது கோவை குண்டுவெடிப்பு நடந்தது ஏராளமானோர் உயிரிழந்தனர்.
அப்போது நடந்த தேர்தலில் மூன்று நாட்கள் இந்த கோவை நாடாளுமன்ற தொகுதியில் திறந்த வேனில் அவருக்காக பிரச்சாரம் செய்தேன். சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற பிரச்சாரம் செய்தேன். நல்ல வாக்குகளில் அவர் வெற்றி பெற்றார். நாகலாந்து ஆளுநராக போகக் கூடும் என ஏடுகள் தெரிவித்து வந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.
வீரமும், விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு பகுதி பிரதியாக, குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். மாநிலங்களவைத் தலைவராக சிறப்பாக வழி நடத்துவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்து, அடுத்து குடியரசுத் தலைவராக கூட அவர் மாறலாம். கட்சி எல்லைகளைக் கடந்து, தாய் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், நல்ல பண்பாளர், கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரையும் மதிக்கக் கூடியவர். துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்கள் வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றோம்" என பேசினார்.
தொடர்ந்து அவர், "சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன், வாழ்த்துச் சொன்னேன். இந்தியா கூட்டணி யாரை நிறுத்தப் போகிறார்கள்? போட்டியிருக்குமா? என்பதை யூகமாகச் சொல்ல முடியாது.
நண்பர் என்ற முறையில் கட்சியை கடந்து குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி, வாழ்த்துகிறேன். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற, தமிழகத்தில் தலைமை தாங்குகின்ற திமுகவும் தோழமைக் கட்சிகளும் ஆலோசித்து, முதலமைச்சர் மூலமாக அறிவிக்கின்ற அறிவிப்பின்படி மறுமலர்ச்சி திமுக நடந்து கொள்ளும் திமுக எடுக்கின்ற முடிவை ஏற்றுக் கொள்வோம்" என விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய அவர், "தூய்மை பணியாளர் போராட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பேசியிருக்கிறார். தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை யூகமாக சொல்ல முடியாது. தூய்மை பணியாளர்கள் அதே பணியை திரும்ப செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு. குலக்கல்வி திட்டத்தைப் போல தந்தை செய்வதை மகன் செய்ய வேண்டும் என்பதைப் போல அது சமூகநீதிக்கு விரோதமானது
தமிழக வெற்றி கழகம் மாநாடு, மற்ற கட்சிகளை போல மாநாடு நடத்துகின்றது. லட்சோப லட்சம் கூட்டங்களை நான் பார்த்தவன். குறிப்பிட்ட சமூகம் தான் தேர்தலை தீர்மானிக்கும் என்பது சரியானது கிடையாது" என்றார். மீண்டும் மல்லை சத்யாவை கட்சியில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு வைகோ பதில் அளிக்காமல் கிளம்பினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அவர் ஓபிசி - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அதிமுக - பாஜகவுக்கு இந்த சமூகத்தில் வாக்கு வங்கி அதிகம் இருக்கிறது என்பதாலும் இவரை துணை ஜனாதிபதியாக நிறுத்தி வாக்குகளை அறுவடை செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஒருவேளை திமுக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளரை திமுக புறக்கணித்துவிட்டது என எதிர் பரப்புரை செய்யவும் ஏதுவாக இருக்கும் என பாஜக - அதிமுக திட்டமிட்டிருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வேளையில், இந்தியா கூட்டணி இன்று தனது வேட்பாளரை இறுதி செய்கிறது. இதில் இந்தியா கூட்டணியும் தமிழரை வேட்பாளராக நிறுத்துமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ