)
சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டார். இதற்காக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற திருச்சி வந்திருந்தார் பொதுச்செயலாளர் என் ஆனந்த். ஆனால் காவல்துறை விஜய் பேசுவதற்கு அனுமதி தரவில்லை. மேலும் ஏர்போர்ட்டுக்கு எதிரே உள்ள கோயிலில் சாமி கும்பிட சென்றபோது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று என் ஆனந்த் மீதும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர். தற்போது விஜய்யும் காட்டமான அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்தால் பயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேட்ட இடத்தில் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேறொரு இடத்தை தேர்வு செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. தற்போது அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.…
— TVK Vijay (@TVKVijayHQ) September 9, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ