PM Modi vs MK Stalin, Tamil Nadu Politics: தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகை மட்டுமின்றி 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்ற இருப்பதால் அரசியல் களத்தில் பலரும் இந்நிகழ்வை உற்றுநோக்கி வருகின்றனர்.
Tamil Nadu Politics: பிரதமர் மோடி போட்ட பதிவு
தமிழகம் வருகையை ஒட்டி, பிரதமர் மோடி இன்று அவரது X தளத்தில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், தமிழ்நாடு இருக்கிறது!' என்ற தலைப்பில் தமிழில் பதிவிட்டிருந்தார். அதில், "மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்ற அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதே பதிவை ஆங்கிலத்திலும் அவர் பதிவிட்டிருந்தார்.
Tamil Nadu Politics: முதல்வர் ஸ்டாலின் பதிலடி
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தற்போது அவரது X தளத்தில், 'Tamil Nadu counts the betrayals of NDA' என்ற தலைப்பில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். 'தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துரோகங்களை, தமிழ்நாடு எண்ணிப் பார்க்கிறது'என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், "தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே..." என குறிப்பிட்டு பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் எழுப்பி உள்ள கேள்விகள் கீழ் வருமாறு:
Tamil Nadu Politics: ஸ்டாலின் எழுப்பிய நறுக் கேள்விகள்
- தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ரா சிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?
- தொகுதிகள் மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
- பாஜகவின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
- தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜி ராம் ஜி திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்?
- பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பாஜக அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
- இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
- ஓசூர் விமான நிலையம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
- கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
- ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? உள்ளிட்ட கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எழுப்பி உள்ளார். மேலும், அந்த பதிவில் கடைசியாக, "தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்" என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | திமுகவுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - பிரதமர் மோடி!
மேலும் படிக்க | மாணவர்களுக்கு திமுக மடிக்கணிணி வழங்கியது ஏன்? எடப்பாடி பழனிசாமி சொன்ன விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









