)
Ajithkumar Lockup Death: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் (27) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத் அஜித்தின் உடலை சோதித்துபார்த்து காயங்கள் குறித்து நேற்று (ஜூன் 29) பார்வையிட்ட பின்னர், அஜித்தின் குடும்பத்தினரிடம் விசாரணையும் நடத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தாயார், சகோதரர் மற்றும் குடும்பத்தினர் நேரில சென்று பிணவறையில் அஜித்குமாரின் உடலை பார்வையிட்ட பின்னர் உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுசெய்யப்பட்டு வழக்கமான நடைமுறையின்படி உடற்கூராய்வு நடைபெற்றது. பின்னர் அஜித்குமாரின் உடலானது உடற்கூராய்விற்கு பின்னர் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது.
Ajithkumar Lockup Death: தமிழ்நாடு அரசுக்கு கடும் அழுத்தம்
இந்நிலையில், காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் நிகழ்வதை தடுக்க கடுமையான தண்டனைகள் விதிக்க கோரியும் அதிமுக, பாஜக, தவெக போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் திமுக அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக, அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இதுபோல சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அஜித் குடும்பத்தினர் சார்பில் மாஜிஸ்திரேட்டிடம் மனு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Ajithkumar Lockup Death: நயினார் நாகேந்திரன் கிடுக்குப்பிடி
இந்நிலையில், அஜித்குமாரின் லாக்கப் மரணம் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது போட்டுள்ள X பதிவில், பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் 'காவல்துறை அமைச்சர்' ஸ்டாலினிடம் இருந்த இருந்து பதில்களை பெற்று தரும்படி ஊடகங்கள், பத்திரிகைகளை கேட்டுக்கொள்வதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Ajithkumar Lockup Death: முதல்வர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?
5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4 மணி நேரமா?
6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட திமுக அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?
9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்.
Ajithkumar Lockup Death: உயர் நீதிமன்றமும் கேள்வி
நயினார் நாகேந்திரன் இந்த 9 கேள்விகளையும் முதல்வர் ஸ்டாலின் நோக்கி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு மட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து இதுவரையில் தமிழ்நாடு முதல்வர் தரப்பிலோ, துறை ரீதியாகவோ எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜராஜன், மாரிஸ் குமார், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மரியா கிழார் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தனர்.
இதற்கு நீதிபதிகள், "ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாதபட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தியது ஏன்" என கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரர் மனுவாகப் பதிவு செய்யும்படியும், நாளையே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ