Nainar Nagenthran Questions CM MK Stalin: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (Kalaingar Magalir Urimai Thogai) தேர்தல் குறிவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் (Nainar Nagenthran) இன்று (அக். 11) அவரது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2021 தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு 2023ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்?
Nainar Nagenthran: நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து...
30 மாதங்கள் வழங்காமல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்? 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்?.
Nainar Nagenthran: இதுதான் திராவிட மாடல் சமத்துவமா?
தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா?. ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் "தகுதியற்றவர்கள்" என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா?.
Nainar Nagenthran: ரூ.30 ஆயிரம் கடனை எப்போது கொடுப்பீர்கள்?
இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா?. சரி, தங்கள் கணக்குப்படி தகுதியுள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மகளிருக்கு 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான 30 ஆயிரம் ரூபாய் கடனை எப்போது தான் அடைப்பீர்கள்" என்றும் கேள்வி எழுப்பினார்.
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் திரு. @mkstalin அவர்களே?
2021 தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு 2023 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்?
30 மாதங்கள் வழங்காமல், 2024 பாராளுமன்றத்… pic.twitter.com/r6POvDQjfs
— Nainar Nagenthran (@NainarBJP) October 11, 2025
Nainar Nagenthran: நயினார் நாகேந்திரன் வெளியிட்ட வீடியோ
மேலும் அவர், "போதும் போதும் முதல்வரே, ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முன்னர் பேசியவற்றின் மூன்று வீடியோ பதிவுகளை தொகுத்து பதிவிட்டிருந்தார்.
Nainar Nagenthran: தேர்தலுக்கு முன்... தேர்தலுக்கு பின்...
முதல் வீடியோ, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் ஸ்டாலின் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். அதில், "நல்ல கவனிங்க பெண்களுக்கு அற்புதமான திட்டம் ஒன்றை அறிவிக்க இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்க இருக்கிறோம்" என அதில் பேசியிருந்தார். அடுத்த வீடியோ ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் பேசியது, அதில், "தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்" என பேசியிருந்தார்.
Nainar Nagenthran: உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு
கடைசியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய வீடியோ, அதில், "முக்கியமான திட்டம், நீங்கள் எதிர்பார்க்கிற திட்டம், உங்கள் பலர் பயனடைந்த திட்டம், தேர்தல் வாக்குறுதியில் தலைவர் (ஸ்டாலின்) அளித்த வாக்குறுதி திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இன்னும் சில மகளிருக்கு வரவில்லை என பெண்கள் சொல்கிறார்கள், பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு வந்திருக்கிறது, எங்களுக்கு வரவில்லை என்கிறார்கள். இதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுத்து, திட்டத்தை நீட்டிக்க உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு மாதங்களில் இன்னும் அதிகமான, தகுதியுள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொடுக்கப்படும்" என பேசியிருப்பார்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : எல்லோருக்கும் ரூ.1000 - முக்கிய தகவல்
மேலும் படிக்க |கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக எத்தனை பேருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









