Neeya Naana Today : தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டு கல்விக்கான நிதியை கொடுப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டது. அத்துடன் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என அறிவித்து நிதியையும் ஒதுக்கிவிட்டது.
இதனால் மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒளிபரப்பாக இருந்தது. விஜய் தொலைக்காட்சி சமூக வலைதள பக்கங்களிலும் மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் என்ற தலைப்பிட்டு விளம்பரமும் கொடுக்கப்பட்டது.
ஆனால் நேற்றிரவு திடீரென அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கை தொடர்பான எபிசோடுக்கு பதிலாக வேறு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கை தொடர்பான நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
யாருடைய அழுத்தத்தின் காரணமாக விஜய் தொலைக்காட்சி இந்த எபிசோடை ஒளிபரப்புவதில் இருந்து பின்வாங்கியிருக்கிறது என்ற கேள்வியை பலரும் முன்வைத்துள்ளனர். வலதுசாரி அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மும்மொழிக் கொள்கை தொடர்பான எபிசோடு ஒளிப்பரப்பவுதில் இருந்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பின்வாங்கியிருக்கிறது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமூக விஷயங்களை தைரியமாக எடுத்து, அதில் பொதுமக்கள் மற்றும் நேரடிஅனுபவசாலிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோரை கலந்து கொள்ள செய்து, அதன் அனைத்து கோணங்களையும் அலசி ஆராயும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது நீயா நானா.
ஒரு வெகுமக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு ஊடகத்தில் சமூக விஷயங்களை உரக்க பேசி வரும் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. அப்படியான அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனை குறித்து விவாதித்திருக்கும் இந்த சூழலில் அதனை ஒளிபரப்ப விடாமல் தடுத்தது யார் என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









