)
வடகிழக்கு பருவமழை 2025 அக்டோபர் மாதத்தில் துவங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக, அக்டோபர் மாதம் கடைசியில் வங்கக் கடலில் மோந்தா புயல் உருவானது. இந்த மோந்தா புயல் ஆந்திரா கடற்கரையையொட்டி, கடந்த நிலையிலும், தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு, பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இன்னும் சில தினங்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (02-11-2025) காலை 05.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் மற்றும் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று (01-10-2025) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (02-11-2025) காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08,30 மணி அளவில், வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 2025 நவம்பர் 2ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 2,3ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ