)
TamilNadu Government : வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27 ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது, வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இக்கூட்டத்தில், முதலமைச்சர் பேசும்போது; அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக, முதன்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை சிறந்த முறையில் கையாளப்பட்டு வருவது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 1,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த தொகையைவிட, நாம் அதிகமாக பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், மக்கள் நன்மைக்காக அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இப்பணிகளை நாம் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அதனால், இவ்வரசு பொறுபேற்றப்பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, ஆயத்த கூட்டங்களை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களையும் தான் நடத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும், அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்துகொண்டு, தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்ததோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும் என்றும், காலநிலை மீள்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டமும், கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் தலைமையில் மூன்று கூட்டங்களும் நடைபெற்றன. இப்பேரிடரை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு துறை உயர் அலுவலர்களும் மற்றும் மாவட்ட நிருவாகமும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
வானிலை அறிவிப்பு
நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டுத் திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், தரம் மேம்படுத்தப்பட்ட மாநில அவசர கால செயல்பாட்டு மையம், பொதுமக்களுக்கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி மற்றும் அரசு அலுவலர்களுக்கான டி.என். ஸ்மார்ட் 2.0 (TN Smart 2.0) இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025-க்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை
கடந்த 2021-2025 ஆம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5351.9 கோடியை விட தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 9170.48 கோடி செலவு செய்துள்ளது என்றும், இந்த நிதியாண்டுக்கான SDRF 2வது தவணை ரூ. 661.20 கோடியும், SDMF 2-வது தவணை ரூ.165.30 கோடியும், ஆக மொத்தம் ரூ. 826.50 கோடி ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ