பகல்காம் தீவிரவாத தாக்குதல்: பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் குற்றச்சாட்டு!

Seeman About Pahalgam Terror Attack: பகல்காம் தீவிரவாத தாக்குதலில் பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி அடைந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 23, 2025, 02:15 PM IST
  • பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்
  • இந்த கொடூர தாக்குதலுக்கு நாதக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
பகல்காம் தீவிரவாத தாக்குதல்: பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் குற்றச்சாட்டு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான பகல்காம் பகுதியில் நேற்று திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காயமடைந்த நிலையில், சுமார் 26 பேர் பலி ஆகி உள்ளனர். இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர்  பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.

இத்தனை ஆயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும்  இராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது?

இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை  தோல்வியாகும். இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயிள்ளது.

இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறா வண்ணம் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற் கடமையாகும். இக்கொடியத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: மதத்தை உறுதிசெய்ய பேண்டை கழற்ற சொன்ன தீவிரவாதிகள்.. கண்ணீர்விடும் குடும்பத்தினர்!

மேலும் படிங்க: பகல்காம் தாக்குதல் : பாரமுல்லாவில் எல்லை தாண்டிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News