)
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஒரு நபர் குழு, தனது இடைக்கால அறிக்கையை செப்டம்பர் 30 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், 2003ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்து, அரசின் பங்களிப்புடன் சேர்த்து, ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்யும் திட்டமாகும். ஆனால் இந்த திட்டத்தில், உத்தரவாதமான ஓய்வூதியம் எதுவும் இல்லாததால் அரசு ஊழியர்கள், தங்களுக்கு பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 2025ல், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. மாநில அரசின் நிதிநிலை மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் ஆகிய இரண்டையும் சமன் செய்யும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் இவை இரண்டையும் இணைத்த ஒரு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்றையும் விரிவாக ஆய்வு செய்து, அரசுக்கு ஒரு நடைமுறைப்படுத்தத்தக்க பரிந்துரையை வழங்குவதே இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
இந்த நிலையில் ககன்தீப் சிங் பேடி குழு, தனது இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இருப்பினும், இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, "சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் அளவு மிக அதிகமாக இருப்பதாலும், இது தொடர்பாக ஒன்றிய அரசு, நிதி நிறுவனங்கள், மற்றும் எல்.ஐ.சி ஆகியவற்றுடன் மேலும் விரிவான கலந்தாய்வுகளை நடத்த வேண்டியிருப்பதாலும், தனது பணியை இறுதி செய்து, முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது," என்று குழு தெரிவித்துள்ளது.
இந்த இடைக்கால அறிக்கை, முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய எதிர்காலத்தை தீர்மானிக்கும் இறுதி அறிக்கைக்காக, ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ