)
Pa Ranjith Latest News Updates : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி அபிசெல்வி. மாணவி அபிசெல்வி கடந்த மூன்று வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.
அபிசெல்வியின் காதலிக்கு அவரது 36 வயதான தாய் எஸ்தர்பாலின் மற்றும் சகோதரர் சிவஞானம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூன் 9) அபிசெல்வி பூச்சி மருந்து உட்கொண்டது மட்டுமின்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கயத்தாறு போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அதிர்ச்சி அபிசெல்வியை அவரது சகோதரர் சிவஞானம் கொலை செய்ததும் அதற்கு அவரது தாய் எஸ்தர்பாலின் உடந்தையாக இருந்ததும் உடற்கூராய்வு மூலம் தெரியவந்தது. சிவஞானம் மற்றும் எஸ்தர்பாலின் இருவரையும் கயத்தார் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இதுமட்டுமின்றி, கடந்த சில நாள்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அவரது தம்பியே வெட்டிக்கொலை செய்த விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி, தூத்துக்குடி என தென்மாவட்டத்தில் மீண்டும் நடந்துள்ள ஆணவப் படுகொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவரது X தளத்தில், இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடும்படி கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது என்றும் கடந்த இருதினங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி சம்பவம் குறித்து அப்பதிவில், "கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன" என பா. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
தவெக @TVKVijayHQ
— pa.ranjith (@beemji) June 11, 2026
தலைமையிலான தமிழக அரசே@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும்…
தொடர்ந்து, தூத்துக்குடி சம்பவம் குறித்து, "ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டும் ஒரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது.
சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும்; தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக ரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயல் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .
தொடர்ந்து ரஞ்சித் அவரது பதிவில், "தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்" என கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும் , "காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
'தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன" என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அதில், "இதுபோன்ற பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது" என தமிழ்நாடு அரசுக்கு தனது கோரிக்கையை வைத்திருக்கிறார்.