பகல்காம் தாக்குதல் : பாரமுல்லாவில் எல்லை தாண்டிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய நிலையில், பாரமுல்லாவில் எல்லை தாண்டிய இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2025, 10:22 AM IST
  • பல்காம் தீவிரவாத தாக்குதல்
  • 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
  • எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பகல்காம் தாக்குதல் :  பாரமுல்லாவில் எல்லை தாண்டிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Pahalgam Terror Attack News : ஜம்மு காஷ்மீர், பகல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். பிரபல சுற்றுலா தளமான அப்பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்துக்குள் தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களில் 28 பேரை வரிசையாக சுட்டு வீழ்த்தினர். குடும்பத்தினர் கண் முன்னே ஒவ்வொருவராக சுட்டு கொலை செய்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலைவெறி தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினர் கண் முன்னே இறக்க வேண்டி நேரிட்டது. மனைவி, தாய், சகோதரி என பெண்கள் தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து தவித்த கொடூர காட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை கண்டித்திருக்கும் அதேநேரத்தில் நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பாரமுல்லாவில் 2  பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளை இடைமறித்தபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், ராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பல்காம் பகுதிகளில் மேலும் 6 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வரும் ராணுவம், மலைப் பகுதிகள் என்பதால் ஹெலிக்காப்டர்கள் மூலம் தீவிரவாதிகள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்தப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். டெல்லி திரும்பிய அவர், விமான நிலையத்திலேயே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

தீவிரவாத தாக்குதல் குறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல் அமெரிக்கா சென்றிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் விரைவில் இந்தியா திரும்புகிறார். பால்காம் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கும் இந்த நேரத்தில் அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசனை நடத்த இருக்கிறார். ஜம்மு காஷ்மிரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க | Pahalgam Terror Attack : பகல்காம் தீவிரவாத தாக்குதல் தீவிரவாதிகள் பின்னணி - என்ன நடந்தது?

மேலும் படிக்க | 2000 - 2025: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் - ஒரு மீள் பார்வை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News