)
மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், தன்னை அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பவுன்சர்கள் தூக்கி வீசி தாக்கியதாக, ரசிகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட தமிழக முழுவதும் இருந்து 10 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தலைவர் விஜய் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

மாநாட்டில் பேசுவதற்கு முன்பு மேடையில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் விஜய் தொண்டர்களை நடந்து சென்று சந்தித்தார். அப்போது விஜயை பார்க்க பல தொண்டர்கள் அந்த ரேம்ப் வாக் மீது ஏறினர். இதனால் விஜய்யின் பாதுகாவலர்கள் அதன் மீது ஏறியவர்களை, கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். அதையும் தாண்டி விஜய்யின் அருகே வந்தவர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் விஜய் மீண்டும் மேடைக்கு செல்லும் வரை பரபரப்பு நிலவியது. மேடையில் சுமார் அரைமணி நேரம் பேசிய விஜய் மத்திய மற்றும் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். முதல்வர் முக ஸ்டாலினை UNCLE என்று குறிப்பிட்டு இருந்தார் விஜய்.
பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. மதுரையில் நடைபெற்ற மாநாட்டின் போது, தலைவர் விஜய், ரேம்ப் வாக் மூலம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, விஜய்யை நெருங்கி சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், சரத்குமார் பாதுகாப்பு வளையத்தை மீறி, ரேம்ப் மீது ஏறியுள்ளார். அப்போது, அங்கே பாதுகாப்பிற்காக நின்றிருந்த பவுன்சர்கள், சரத்குமாரை மறித்து, அவரை தூக்கி மேடையிலிருந்து கீழே வீசியதாக கூறப்படுகிறது. இதில், சரத்குமாருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து, சரத்குமார் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், குன்னம் போலீசார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, 189(2), 296(B), மற்றும் 115(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், தமிழக வெற்றிக் கழக வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ