)
ராணிப்பேட்டை மாவட்டம் ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (16.06.25) மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அன்புமணிக்கு, பாமக கொடி வண்ணத்தில் ஆள் உயர மாலையை கிரேனில் அணிவித்து நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், நமக்கு சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகத்தை கற்றுத்தந்தவர் மருத்துவர் ஐயா என புகழாரம் சூட்டிய அவர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சமூக நீதியை செயல்படுத்த முதல்வருக்கு துளியும் எண்ணமில்லை. 4 ஆண்டுகளாக உள் ஒதுக்கீடு தருவதாக கூறி முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார் என குற்றஞ்சாட்டினார். சித்திரை முழுநிலவு மாநாட்டை பார்த்து திமுக பயந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், திமுக வன்னியர்களுக்கு இழைத்தது நம்பிக்கை துரோகம் என காட்டமாக பேசினார்.
நம் கட்சிக்குள் சூழ்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் ஐயாவிடம் தேவையில்லாததை சொல்லி சூழ்ச்சி செய்கிறார்கள். இந்த சூழ்ச்சி பிண்ணனியில் திமுக உள்ளது. ஆனால் அவர்கள் கனவு பலிக்காது என தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் பணியில் கவனத்துடன் வேகமாக செயலாற்ற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குவிந்துள்ள 2.50 லட்சம் மெட்ரிக் டன் குரோமிய கழிவுகளால் புற்று நோய் ஏற்படும் என தெரிந்தும் அரசுக்கு அக்கறையில்லை என குற்றஞ்சாட்டிய அவர், இதனை அகற்ற தமிழக அரசால் முடியாதா?
இந்த தொகுதி அமைச்சர் என்ன செய்கிறார். ராணிப்பேட்டை மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். சோளிங்கரில் வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். அமெரிக்காவித்கு இணையான குற்றம் இந்த பகுதியில் நடந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக முதல்வர் தான். துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க தவறியது தமிழக அரசு என குற்றஞ்சாட்டினார். இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு ரயில் இயக்க வேண்டும், சிப்காட் தொழிற்பேட்டையில் நிலம் அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும், தொழிற்சாலையில் உள்ளூர் வாசிகளுக்கு முன்னுரிமை, ராணிப்பேட்டையில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ