)
RBI Gold Loan Rules Changes: தங்க நகைக்கடன் விதிமுறைகளில் (Gold Loan Rules) பல்வேறு மாற்றங்களை செய்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. குறிப்பாக, வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்க அடகு வைக்கும் நகைகளுக்கு, அதன் ரசீதை சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றங்களை ஆர்பிஐ கொண்டு வந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தங்க நகைக்கடன் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற்று, மீண்டும் பழைய நடைமுறையை தொடர பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (Tamilnadu Chief Minister MK Stalin) உள்பட பலரும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதினர்.
Gold Loan Rules Changes: ஆர்பிஐ வரலாற்றில் முதல்முறை...
அந்த வகையில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் (Su Venkateshan) தங்க நகைக்கடன் புதிய விதிமுறைகளில் செய்யப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்ததை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஆர்பிஐ தலைவருக்கும் கொடுத்தார். இந்நிலையில், ஆர்பிஐ மீண்டும் தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சு. வெங்கடேசன் இன்று போட்ட பதிவு ஒன்றில், தனது பத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது ரிசர்வ் வங்கி என்றும் எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்றொரு பதிவில், "இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Gold Loan Rules Changes: சு. வெங்கடேசனின் 10 கோரிக்கைகள் நிறைவேற்றம்
தொடர்ந்து அந்த பதிவில், தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய 10 கோரிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். அந்த 10 மாற்றங்களை இங்கு காணலாம்.
- இந்த விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வரும். அதிகபட்சமாக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
- 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
- 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.
- அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.
- நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப்படியே கடன் வாங்குபவர்கள் 'இந்த நகை என்னுடையது தான்' என்று அடகு வைக்கும் நபர் ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
- 2.5 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
- விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டுவிட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.
- நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
- வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
- கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும், குறிப்பாக கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ