தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்து சுமார் 4 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை 5 முறை அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் அமைச்சரவையில் மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும் சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத் துறை கூடுதாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வனத்துறையை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை (ஏப்ரல் 28) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
மேலும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம்!
மேலும் படிங்க: தமிழகத்தில் ஓய்வூதியம் தொடர்பாக முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!









