)
Sengottaiyan Latest News Updates: கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (நவ. 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு "பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்" என பதில் அளித்தார். மேலும், தனது அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்த செங்கோட்டையன், நல்லதே நடக்கும் என்றும் பதில் அளித்தார்.
இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கும் அவர் 'நல்லதே நடக்கும்' என்றுதான் பதில் அளித்தார். மேலும், "தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில், 250 பக்கம் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது.
அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது" எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருப்பதை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்ற விதி இருக்கிறது எனவும் செங்கோட்டையன் விளக்கினார்.
அதிமுக எந்த மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, "உங்களுக்கு எல்லாம் தெரியும். மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை நான் சொல்ல தேவையில்லை" என பதிலளித்தார். உங்களை பாஜக இயக்குகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது" என தெரிவித்தார்.
மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு , "இது அவரிடம் (எடப்பாடி பழனிச்சாமி) கேட்க வேண்டிய கேள்வி" என பதில் அளித்தார்.
மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்திருப்பது குறித்த கேள்விக்கு, "அது அவருடைய விருப்பம்" என பதில் அளித்தார்.
அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, "கட்சியில் மகன் தலையிடுகிறார், மைத்துனன் தலையிடுகின்றார், மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. அதனால் அதைப் பற்றி சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்" எனவும் தெரிவித்தார்.
அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்த கேள்விக்கு "அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என செங்கோட்டையன் பதிலளித்தார். அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும்தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது" என்றார். பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா என்ற கேள்விக்கு, "உறுதியாக" என தெரிவித்தார்.
கடந்த செப். 5ஆம் தேதி அன்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்துசென்றவர்களை உடனடியாக ஒன்றிணைக்க வேண்டும் என்றும் ஒன்றிணைத்தால் மட்டுமே அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னரும் அவர் இபிஎஸ் மீதான அதிருப்தியை பல இடங்களில் வெளிப்படுத்தி வந்தார். செங்கோட்டையன் அளித்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, கடந்த அக். 30ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன், முத்துராமலிங்கனாரின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இணைந்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி இபிஎஸ் கடந்த அக். 31ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ