)
TN government subsidy : தூத்துக்குடி, (ஆகஸ்ட் 24, 2025): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட சமூக நல அலுவலகம் அறிவித்துள்ளது. கடைசி தேதி நெருங்கி வருவதால், தகுதியுள்ள பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் நோக்கம்
குடும்பத் தலைவிகளான கைம்பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பொருளாதாரச் சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ₹10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வணிக ரீதியான உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ₹5,000 மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த மானியத் தொகையைப் பெற, விண்ணப்பதாரர்கள் சில தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவை:
பூர்வீகம்: தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
வருமானம்: ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முன்னுரிமை: கைம்பெண், ஆதரவற்ற பெண் அல்லது கணவனால் கைவிடப்பட்டவராக இருந்தால், அதற்கான சான்றுகளை வட்டாட்சியரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.thoothukudi.nic.in என்ற வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து, ஆகஸ்ட் 31, 2025-க்குள், மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான தகுதியுள்ள பயனாளிகள், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 0461-2325606 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
மற்ற மாவட்டத்தினருக்கான தகவல்
இந்த திட்டம் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்பது மாறுபடும். எனவே, உங்கள் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இன்னும் காலவகாசம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு, தகுதியான பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து மாவு அரைக்கும் இயந்திரம் மானியத்துடன் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ