)
தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்த பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காகவும், தமிழ்நாடு அரசு புதிய சிறுகடன் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி, அவர்களை பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின பெண்களை, தொழில் முனைவோராக மாற்றுவதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் ஆகும். சுய உதவி குழுக்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், கூட்டு பொறுப்புணர்வுடன் பெண்கள் செயல்பட்டு, வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தி, தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு இது வழிவகுக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மிக குறைந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண வங்கி கடன்களுடன் ஒப்பிடுகையில், பெண் தொழில் முனைவோருக்கு மிக பெரிய நிதி சுமையை குறைக்கும். மேலும் சுய உதவி குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் செய்யவிருக்கும் தொழிலின் தன்மையை பொறுத்து, கடன் அளவு நிர்ணயிக்கப்படும். இது, புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்துவதற்கும் போதுமானதாக இருக்கும். கடன் பெற்ற குழுக்கள், மாதாந்திர தவணைகள் மூலம் எளிதாக கடனைத் திருப்பி செலுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற, சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் சுய உதவிக் குழு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிறுபான்மையின மகளிர் சுய உதவிக் குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், அரசு வரையறுத்துள்ள சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், தங்கள் மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களை பெறலாம். விண்ணப்ப படிவங்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல பிரிவிலோ அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சுய உதவி குழுவின் தீர்மானம், உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொழில் திட்டம் குறித்த அறிக்கை போன்ற தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகளில் கடன் வழங்கப்படுகிறது. முதல் வகையில் குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு 7 சதவீத வட்டியில் 1 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் கடனை திரும்பி செலுத்த வேண்டும். 2வது வகையில் அதிகபட்சமாக ஒருவருக்கு 1.5 லட்சம் வழங்கப்படும். ஆண்களுக்கு 10% வட்டி, பெண்களுக்கு 8% என்ற விதிக்கத்தில் வட்டி வசூலிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ