Tamil Nadu ration delivery : தமிழ்நாடு இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் மாநிலமாக இருக்கிறது. அந்தவகையில் இப்போது ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று விநியோகம் செய்யும் திட்டம் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருக்கும் மலைக் கிராமமான வெள்ளக்கவி கிராமத்துக்கு தான் ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
அண்மையில் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று விநியோகம் செய்யப்படுமா? என கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்படும் திட்டம் அமலில் உள்ளது. அந்த திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து தமிழ்நாட்டு அதிகாரிகள் நேரில் சென்று செய்ய உள்ளனர். அதன்பிறகு தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
கொடைக்கானலில் அறிமுகம்
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் முதன்முறையாக ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் திட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைக்கிராமமான வெள்ளக்கவியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கிராமம் கொடைக்கானலில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சாலை வசதி என்பதே இல்லாத கிராமம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கூட கொடைக்கானலுக்கு தான் அப்பகுதி மக்கள் ஒத்தையடி பாதையில் நடந்து வந்தாக வேண்டும். கரடுமுரடான அந்த ஒத்தையடி பாதையும் ஆபத்தையும், சவால்களையும் கொண்டதாகவே இருக்கிறது. எந்த பொருட்கள் என்றாலும் கழுதை உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தியே மலைக்கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இப்போது ரேஷன் பொருட்களும் விலங்குகளின் மீது வைத்தே அந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம்செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் தங்களுக்கு உரிய சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்களுக்கு சாலை வசதிகோரி போராடி வரும் அம்மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் அப்பகுதி அடர் வனப்பகுதி என்பதால் பல சட்டச்சிக்கல்கள் இருப்பதால் சாலைவசதி உடனடியாக அமைக்க முடியாத சூழலும் உள்ளது. இந்த சூழலில் ரேஷன் பொருட்கள் தங்களின் வீடுகளுக்கு வந்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 12,000 மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ