கொரோனா வைரஸ்: மாஸ்க் தட்டுப்பாடு! சீனாவிற்கு உதவ மதுரை களமிறங்கியது !

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையிலிருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Last Updated : Jan 30, 2020, 11:14 AM IST
கொரோனா வைரஸ்: மாஸ்க் தட்டுப்பாடு! சீனாவிற்கு உதவ மதுரை களமிறங்கியது ! title=

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையிலிருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு ஒரு விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை விமானத்தில் ஏற்றிச்செல்ல இந்தியாவின் கோரிக்கையை  சீனா ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகமூடி அணிந்து சுற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுதல் மூலம் மட்டுமே பரவும். ஆனாலும் மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மாஸ்கை அணிந்து இருக்கிறார்கள். இதனால் அங்கு மாஸ்க் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. 

அந்தவகையில் தற்போது சீனாவிற்கு உதவுவதற்காக மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மதுரையில் உள்ள எம்எம் மெடிவேர் நிறுவனம் கூடுதல் நேரம் வேலை பார்த்து வருகிறது. சீனாவிற்கு இவர்கள் இங்கிருந்து மாஸ்க் ஏற்றுமதி செய்கிறார்கள். உயர் ரக என்95 மாஸ்க்களை இவர்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் எம்டி அபிலாஷ் அளித்த பேட்டியில், எங்களுக்கு தினமும் நிறைய ஆர்டர் வருகிறது. சீனாவில் மக்கள் இந்த மாஸ்க்களை அதிகம் வாங்கி வருகிறார்கள். இதனால் நாங்கள் எங்கள் பணியை இரட்டிப்பாக்கி, உற்பத்தியையும் இரட்டிப்பாக்கி உள்ளோம். எங்கள் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் இதற்காக பணியாற்றி வருகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Trending News