Tamil Nadu Latest News Updates: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை என்றும் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Latest News Updates: தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே புதிதாக 10 லட்சம் மதிப்பில் கிரிக்கெட் மைதானம் மற்றும் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு இன்று (பிப். 12) திறந்து வைத்தார்.
பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் கால்பந்து ஆகியவற்றை பரிசாக வழங்கினார். மேலும், கால்பந்து விளையாடி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tamil Nadu News: தவெகவிற்கு பெரிய வாக்குகள் இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி,"முதலமைச்சர் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்துள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் தொடரும். தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பு. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாதது அந்த இயக்கம் இல்லாமல் போய்விட்டதற்கு சமம். இனி வரக்கூடிய தேர்தலில் அதிமுக இருக்குமா? இருக்காதா? என்பதே சந்தேகம்தான்.
பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம். 200 தொகுதி இலக்கு என்று சொல்லியுள்ளோம் ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சினிமா வேறு அரசியல் வேறு என்று மக்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். அதனால் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை" என்று தெரிவித்தார்.
Tamil Nadu News: திமுகவும் I-PAC நிறுவனமும்...
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்துடன்தான் கூட்டு சேர்ந்திருந்தது. அந்த நிறுவனம் திமுகவின் பிரச்சாரங்களுக்கு பெரியளவில் பங்களித்ததாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் நடை, உடையில் இருந்து பல்வேறு விஷயங்கள் I-PAC நிறுவனத்தின் கைவண்ணமே என கூறப்பட்டது. ஸ்டாலின் தான் வராரு... நல்லாட்சி தர போறாரு' உள்ளிட்ட பிரச்சார பாடல்களும் திமுகவின் பரப்புரைக்கு அடித்தளமாக அமைந்தன. இவை அனைத்திற்கும் I-PAC நிறுவனம் முக்கிய பங்காற்றியதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Tamil Nadu News: தவெக உடன் பிரசாந்த் கிஷோர்
தற்போது I-PAC நிறுவனத்துடன் பிரசாந்த் கிஷோர் நேரடி தொடர்பில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட தொடர்ந்து முனைப்பு காட்டுகிறார். அந்த வகையில், நேற்றும், நேற்று முன்தினமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் ஈடுபட்டது பெரியளவில் கவனம் ஈர்த்தது.
ஏற்கெனவே, தவெகவில் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையின் போது பிரசாந்த் கிஷோர் தவெகவின் தற்போதைய வாக்கு சதவீதம் குறித்தும் தேர்தல் நேரத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை குறித்தும் ஒரு அறிக்கையாக அகட்சியின் தலைமையிடம் சமர்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ