Jana Nayagan leak: தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Jana Nayagan leak Latest News Updates: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக வெளியானது திரையுலகிலும், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை சுமார் 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பபட்டுள்ளன என்றும் குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு இன்று (ஏப். 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு இணையவழி குற்றத் தடுப்பு பிரிவானது, பல டிஜிட்டல் தளங்களில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத இணைய கசிவு தொடர்பான புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் பாரதிய நியாயா சன்ஹிதா (பி. என். எஸ்) தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினிமாடோகிராஃப் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது" என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, "புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீறப்பட்ட URL-களை அடையாளம் கண்டு தடுப்பது, டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் தொடர் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் விசாரணை மூலம் கண்டுபிடிப்பது போன்ற வழக்கின் பல்வேறு அம்சங்களைக் கையாள சைபர் குற்றப் பிரிவில் பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
திருட்டு உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க இணையவெளியில் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, சுமார் 300 மீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பபட்டு உள்ளது.
மேலும் அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. அதில், "ஜனநாயகன் அல்லது பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களின் (திரைப்படங்கள்) திருட்டு பிரதிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு கைது செய்யப்படக்கூடிய குற்றமாகும், மேலும் தகுந்த சட்டங்களின் கீழ் தண்டனைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள், செய்தியிடல் தளங்கள் அல்லது வலைத்தளங்கள் மூலம் திருட்டு உள்ளடக்கத்தை தெரிந்தே பரப்பும் அல்லது ஊக்குவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேபோல், நீங்கள் இதேபோன்ற இணைப்புகள் பார்க்க நேர்ந்தாலும் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம்.
ஜனநாயகன் திரைப்படம்தான் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் கட்சி ஆரம்பித்த போதே, GOAT திரைப்படத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தை ஒப்பந்தம் செய்துள்ளேன். அதன்பிறகு முழு நேர அரசியலில் தீவிரமாக களமாடுவேன் என தெரிவித்திருந்தார். அந்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் தொடர்ச்சியாக சிக்கலில் சிக்கி வந்தது.
திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை சான்றிதழ் பெற எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு நீதிமன்றத்தை அணுகியது. அதிலும் பெரும் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்னர், அதாவது பிப்ரவரி மாதத்தில் திரைப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதற்காக வழக்கை வாபஸ் வென்று, மறு தணிக்கை குழு அமைக்கவும் படக்குழு ஒப்புக்கொண்டது. ஆனால் மறு தணிக்கை குழு படத்தை பார்க்க தாமதம் ஏற்பட்டது. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறையும் மார்ச் 15 முதல் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் திரைப்படம் வெளியாக பல சிக்கல் இருப்பதால் திரைப்படம் தேர்தலுக்கு பின்னர்தான் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன் இத்திரைப்படம் ஆன்லைனில் சட்டவிரோதமாக கசிந்துவிட்டது. இதனால், திரையுலகம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததால் ஏற்கெனவே திரையுலகம் பல பாதிப்புகளை அடைந்துள்ளது. பல பெரிய திரைப்படங்கள் கூட ஜனநாயகன் ரிலீஸை எதிர்பார்த்து, தங்களின் ரிலீஸையும் தள்ளிப்போட்டு வருகிறது. உதாரணத்திற்கு சூர்யாவின் கருப்பு திரைப்படம்.
திரையுலகில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அரசியல் லாபத்திற்காகவும், தனது திரைப்படக் காட்சிகள் மூலம் மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகவும் விஜய் தரப்பில் இருந்துதான் இத்திரைப்படம் கசியவிடப்பட்டுள்ளது என மற்ற அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் இதற்கு பின் திமுக - பாஜக கூட்டுச்சதி இருப்பதாகவும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ