)
Tamilaga Vetri Kazhagam Madurai Maanadu: நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஜனநாயகன் திரைப்படத்தோடு தனது திரைவாழ்க்கையை நிறுத்திக்கொள்வதாகவும் கட்சியை தொடங்கியதாக அறிவித்த அன்றே கூறினார்.
மேலும், தவெக 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் என நடிகர் விஜய் அப்போது அறிவித்தார். இதனால், 2024 மக்களவை தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக பங்கெடுக்கவில்லை. தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்காக பல்வேறு களப் பணிகளை செய்து வருகிறது. சமீபத்தில் கூட தவெக தலைவர் விஜய், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கிவைத்திருந்தார்.
அதுமட்டுமின்றி, தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் விஜய் அவரது கட்சியின் கொள்கைகள், கொள்கை தலைவர்கள், எதிர்கால திட்டங்கள், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தினார். தவெகவின் அந்த விழுப்புரம் மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றது மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில், வரும் ஆக. 25ஆம் தேதி அன்று மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்தார். ஆனால், ஆக. 25ஆம் தேதியை ஒட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இருப்பதால் அன்றைய தேதியில் மாநாடு நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஏதாவது ஒரு தேதியை தேர்வு செய்துகொள்ள போலீசார் தவெகவுக்கு பரிந்துரைத்தனர்.
இந்நிலையில், மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாட்டின் புதிய தேதியை தவெக தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 5) அறிவித்துள்ளார். அதன்படி, முன்னர் திட்டமிட்ட அதே மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், "மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கட்சியின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கட்சியின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
— TVK Vijay (@TVKVijayHQ) August 5, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று, மாலை 4 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ