Tamilisai Soundararajan: தவெக தலைவர் விஜய் வாயை திறந்துவிட்டாரா?, அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? தற்போது யார் அவரை எழுப்பிவிட்டது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.

Tamilisai Soundararajan In Thoothukudi: தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும் தென்பகுதியை முன்னேற்றவில்லை. ஆனால் இன்று பார்த்தால் விமான நிலையமாக இருந்தாலும் சரி, துறைமுகமாக இருந்தாலும் சரி பிரதமர் மிகப் பெரிய வளர்ச்சியை கொடுத்துள்ளார்.
நான் இங்கு தேர்தலில் நிற்கும் போது விரிவடையும் எல்லா வசதிகளும் வரும் என்று சொன்னேன். ஆனால் எல்லோரும் கிண்டல் செய்தனர், ஆனால் இன்று அதே வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது. இது பிரதமரின் முழுமையான முயற்சியும் தொலைநோக்குப் பார்வை. இதை யாரும் எங்களால்தான் கொண்டு வந்தோம் என்று சொல்ல முடியாது. ஒரு கார் கம்பெனியை தூத்துக்குடியில் திறந்து உள்ளனர். ஆனால் எந்த ஒரு அந்நிய முதலீடு என்றாலும் மத்திய அரசின் துணை தேவை. இவை அனைத்திற்கும் மத்திய அரசுதான் காரணம், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி பொய் சொன்னதற்காக கைது செய்யப்பட்டுள்ளார், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஏதோ தியாகியை போன்று முன்னிறுத்துகின்றனர். வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் பத்து நாட்களாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திடீர் திடீரென்று இப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ளும். பொய் சொல்வதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் திமுகவின் தோல்வி ஆரம்பிக்கப் போகிறது. தெற்கு திசையில் இருந்து திமுகவின் தோல்வி ஆரம்பிக்கிறது என்று நான் தைரியமாக சொல்வேன். எல்லா திசைகளிலும் தோல்வி ஏற்படும். முதல்வர் ஸ்டாலின் தன்னை பிரதமரோடு ஒப்பிடுகிறார்.
கிட்னி திருட்டு நடைபெறுகிறது இதை திருட்டு என்று சொல்லக்கூடாது, முறைகேடு என்று சொல்லிக் கொள்ளலாம் என்கின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அவரது மருத்துவமனை அதில் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் தீர விசாரிக்கப்பட வேண்டும். வெறும் உரிமம் மட்டும் ரத்து செய்தால் போதாது. இதற்கு முதல்வர் விளக்கம் சொல்ல வேண்டும். கழிவறை உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஊழல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் பார்ப்பதில்லை. மக்கள் பலவற்றிலும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்போது பார்த்தாலும் மொழியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மாநில கல்விக் கொள்கையில் என்ன கொண்டு வந்துள்ளனர். உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை பிரம்மாண்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மாநில கல்விக் கொள்கை உயர் கல்வியை பற்றி எதுவும் பேசவில்லை.
தவெக தலைவர் விஜய் வாயை திறந்துவிட்டாரா? பரவாயில்லை தம்பி வாயை திறந்து விட்டாரா? அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று எனக்கு தெரியவில்லை திடீரென்று யார் அவரை எழுப்பினார் என்றும் தெரியவில்லை. ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அன்றாடம் மக்களின் பிரச்சினை எவ்வளவு உள்ளது, தம்பி விஜய் அதை பார்த்தால் பரவாயில்லை. அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு இதை பாருங்கள். நாம் சினிமாவில் எப்ப வேண்டுமானாலும் நடிக்கலாம். தினம் தினம் நாம் மக்கள் பிரச்சினை பற்றி பேச வேண்டும். ஆணவக்கொலை தூத்துக்குடியில் நடந்தது தம்பி அதற்கு வாய் திறந்தாரா?.
திருமாவளவன் உள்ளிட்ட எல்லோரும் கடந்த ஆட்சியில் ஆணவக் கொலை நடந்த போது அரசாங்கம் என்றனர், தற்போது ஆணவக் கொலை நடந்தபோது ஜாதி என்கின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் கூட்டணிக்காக எது நடந்தாலும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆர்ப்பாட்டம் செய்தால் போதுமா? தம்பி விஜய் எங்கு போயிருந்தார்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவராக மிளிர வேண்டும் என்று நினைக்கும் போது கொஞ்சம் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சித் தலைவர் என்று ஒத்துக் கொள்ளலாம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேசினால் யார்? எந்த விஜய் கேட்டார்? என்று இருக்கும்.
பாஜக கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும், இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் தலைவர் 17ஆம் தேதியில் இருந்து வாக்குச்சாவடி மாநாடு நடத்துகிறார். பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். தலைவர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்கிறோம், கால அவகாசம் இருக்கிறது. இன்னும் எங்களிடத்தில் சேருபவர்கள் எல்லோரும் சேருவார்கள்.
தமிழக முதல்வர் ஜெர்மனி செல்கிறார், இதற்கு முன்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன நடந்தது என்று அறிக்கை கொடுத்துவிட்டு செல்லட்டும். முதலீடு ஒன்றும் வராது, இதற்கு முன்பு போன வெளிநாடுகளில் எத்தனை முதலீடுகள் வந்தது என்று கணக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ