)
Tamil Nadu Government Loan Scheme: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான கடன் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், தனிநபர் கடன் மற்றும் குழுக்கடனாக 25 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். இத்திட்டத்திற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.
டாப்செட்கோ கடன் திட்டம் என்றால் என்ன?
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO), பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகத்தினரின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, தனிநபர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் தொடங்க இந்த கடன் திட்டங்கள் உதவுகின்றன.
தனிநபர் கடனுக்கான தகுதிகள்
சமூகப் பிரிவு: விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வருமானம்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
குடும்ப விதி: ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இந்தக் கடன் உதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்: சிறு வர்த்தகம், விவசாயம், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் செய்ய அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
ரூ. 1.25 லட்சம் வரை: ஆண்டுக்கு 7% வட்டி.
ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை: ஆண்டுக்கு 8% வட்டி. கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தலாம்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்
சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் சிறு தொழில்கள் செய்ய, குழு உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ₹1.25 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7% வட்டி.
கடன் காலம்: 3 ஆண்டுகள்.
தகுதிகள்: குழு தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மூலம் தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் இருக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலரும் இக்கடனைப் பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பப் படிவம்: கடன் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இணையதளம்: மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தில் (www.tabcedco.tn.gov.in) இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
கடன் விண்ணப்பப் படிவத்துடன் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுநர் உரிமம் (தேவைப்பட்டால்), ஆதார் அட்டை, தொழில் திட்ட அறிக்கை, வங்கிகள் கேட்கும் பிற தேவையான ஆவணங்கள் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் கடன் திட்டங்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ