தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அருண்குமார் என்பவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வரது மனு நிராகரிக்கப்பட்டது.

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பம் முதலே பல்வேறு அரசியல் அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியுமின்றி தனித்து போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான விசில் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். ஆனால், பிரதான எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் சேலம் மாவட்டத்தின் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், 233 தொகுதிகளில் மட்டுமே தவெக போட்டியிடும் என்ற நிலை உருவானது. இந்த நிலையில், எடப்பாடி தொகுதியில் தனது கட்சியின் இருப்பை பதிவு செய்ய, விஜய் ஒரு புதிய மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அருண்குமார் என்பவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் தாக்கல் செய்த வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், பல முக்கிய தகவல்கள் விடுபட்டுள்ளதாகவும் கூறி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் அதே காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது.
இதில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் என்னவென்றால், வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நாளில் வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானார் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதே தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக பதிவாகும் வாக்குகள் பிரிந்துவிட கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி தரப்பிலிருந்து தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வளவு பெரிய கோட்டையான எடப்பாடியில் சரியான, பலமான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் இல்லை என்ற செய்தி அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க கூடாது என விஜய் தனது அணி நிர்வாகிகளுக்குக் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக தலைமை ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை தவிர்த்து பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதில், பிரேம்குமார் என்ற சுயேட்சை வேட்பாளரை தேர்ந்தெடுத்து, அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முழு ஆதரவை வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், எடப்பாடி தொகுதியில் தவெக-வின் நேரடி வேட்பாளர் இல்லை என்றாலும், விஜய் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் களத்தில் இருப்பார் என்ற நிலை உருவாகியுள்ளது.
பிரேம்குமாரை தவெக ஆதரிக்க போகிறது என்ற ரகசிய தகவல் எதிரணி தரப்பிற்கும் கசிந்துள்ளது. இதையடுத்து, பிரேம்குமாரை தேர்தலில் இருந்து பின்வாங்க செய்வதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் அழுத்தங்களும் மிரட்டல்களும் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையை சமாளிக்கத் தவெக தலைமை மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளது. கட்சி மேலிடம் நேரடியாக பிரேம்குமாரை தொடர்புகொண்டு அவருக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆதரவை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, தவெக தலைவர் விஜய் நேரடியாகவே தொலைபேசி வாயிலாக பிரேம்குமாரிடம் பேசி அவருக்கு தைரியம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பின்வாங்காமல் தேர்தலில் உறுதியாக நிற்பது என்ற முடிவுக்கு பிரேம்குமார் வந்துள்ளார்.
தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய், தனது முதற்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், எடப்பாடி தொகுதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பிரேம்குமாருக்கு ஒதுக்கப்படும் சுயேட்சை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் எடப்பாடி தொகுதி தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஈடுபடவுள்ளனர்.
234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் களம் காண நினைத்த தவெக-விற்கு எடப்பாடி தொகுதியில் ஏற்பட்ட சறுக்கல் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மாற்று வியூகத்தின் மூலம் அதை விஜய் சரிகட்ட முயல்வது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆகமொத்தம், 233 தொகுதிகளில் விசில் சின்னத்திலும், எடப்பாடியில் ஒரு சுயேட்சை சின்னத்திலும் தவெக தனது தேர்தல் பலத்தை பரீட்சித்து பார்க்க தயாராகிவிட்டது. விஜய்யின் இந்த மாஸ்டர் பிளான் எடப்பாடி தொகுதியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வருகின்ற தேர்தல் முடிவுகளில்தான் பார்க்க முடியும்.
1. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது?
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அருண்குமார் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த அவரது மனைவி ஆகியோரின் ஆவணங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
2. வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி தொகுதியில் தவெக யாருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது?
தவெக-வின் நேரடி வேட்பாளர் களத்தில் இல்லாத நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் 'பிரேம்குமார்' என்பவருக்குத் தமிழக வெற்றிக் கழகம் தங்களது முழு ஆதரவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ