)
59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, 2026ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் துணையுடன் விஜய் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இத்தகைய சூழலில், தமிழக ஆளுநரின் உத்தரவின்படி, முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், வரும் 13ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.#CMJosephVijay pic.twitter.com/RnTmpu83l1
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 10, 2026
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 இடங்கள் உள்ளன. இதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு கட்சிக்கும் 118 இடங்கள் கிடைக்காத பட்சத்தில், அது தொங்கு சட்டமன்றம் என அழைக்கப்படுகிறது. இந்த சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 164-ன் கீழ் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அதன்படி, தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அழைப்பு விடுத்தார்.
தவெக-வுக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளதால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளன. இந்த 5 கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்காக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என அவர் ஆளுநருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க அனுமதித்ததோடு, மே 13ம் தேதிக்குள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சர், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தைக் கூட்டி, 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதை வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்ய வேண்டும். இதுவே நம்பிக்கை வாக்கெடுப்பு எனப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்ய கூடாது. மாறாக, சட்டமன்ற மாமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே அதை தீர்மானிக்க வேண்டும். மே 13ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் விஜய் 118 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுவிட்டால், அவரது அரசு எவ்வித சிக்கலுமின்றி தொடர்ந்து செயல்படும்.
ஆனால், கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றாலோ அல்லது போதிய எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க தவறினாலோ, விஜய் அரசு தனது பெரும்பான்மையை இழக்கும். அப்படி நடந்தால், முதலமைச்சர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அதனை தொடர்ந்து, வேறு ஏதேனும் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என ஆளுநர் பரிசீலிப்பார். யாருக்குமே பெரும்பான்மை இல்லை என்ற சூழல் ஏற்பட்டால், சட்டப்பேரவை முடக்கப்பட்டு தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாக தனது பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பது வரும் 13ம் தேதி சட்டமன்றத்தில் தெரிந்துவிடும்.
| தவெக | 107 |
| காங்கிரஸ் | 5 |
| சிபிஐ | 2 |
| சிபிஎம் | 2 |
| விசிக | 2 |
| ஐயூஎம்எல் | 2 |
| மொத்தம் | 120 |
1. தவெக தலைவர் விஜய் தனது பெரும்பான்மையை எந்தத் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும்?
முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், வரும் மே 13-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
2. தொங்கு சட்டமன்றம் என்றால் என்ன?
தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை 'தொங்கு சட்டமன்றம்' எனப்படும். தற்போதைய தேர்தலில் தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.
3. பெரும்பான்மை இல்லாமல் விஜய் எப்படி முதலமைச்சராகப் பதவியேற்றார்?
தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட 5 கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
4. நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?
ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சர், சட்டமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு மூலம் தனக்குக் குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் செயல்முறையே நம்பிக்கை வாக்கெடுப்பு எனப்படும். ஒருவருக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதைச் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்பது சட்ட விதி.