)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மையமாக கொண்டு, ஆளும் திமுக அரசு, மக்களை கவரும் வகையில் பல நலத்திட்டத்தை அறிவிக்க தயாராகி வருகிறது. அதில் சில திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 ரொக்கபணத்தை பொங்கல் பரிசாக வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பொங்கலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதாவது அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை அன்று வெளியிட தமிழக அரசு திட்டம் வைத்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று ஒரு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படலாம், அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படலாம்," என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு போட்டியாக தமிழக மக்களை கவரும் வகையில் பெரிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் தீபாவளி பரிசு அறிவிப்புக்கு இணையாக, மாநில அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பையும் தீபாவளியன்றே வெளியிடுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அரசு நம்புகிறது.
கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த திட்டம் குறித்து கூறுகையில், "இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.10,000 கோடி தேவைப்படும். இந்த நிதி தேவையை சமாளிப்பதற்காக, நிதி துறையை இப்போதே தயார் நிலையில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்து, இந்த திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறி உள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளும் திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த ரூ.5,000 பொங்கல் பரிசு திட்டம், முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. இது மாநிலம் முழுவதும் உள்ள 2.20 கோடி குடும்பங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்பதால், இது ஆளும் கட்சிக்கு ஒரு பெரும் சாதகமான அலையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறை, இரண்டு மாதங்களுக்கு முன்பே அதுவும் தீபாவளி திருநாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவது ஒரு புதிய அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும் அதே வேளையில், அரசியல் களத்தையும் இப்போதே சூடுபிடிக்கசெய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ