)
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, சில மணி நேரங்களிலேயே திரும்ப பெற்ற சம்பவம், தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று நவம்பர் 19 வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக இந்த தேர்விற்காக காத்திருந்த பட்டதாரிகள், விண்ணப்பிப்பதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினர்.

ஆனால், அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த அறிவிப்பு இணையதளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்காததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் மேலும் அதிகரித்தது. ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, வெளியிடப்பட்ட அறிவிப்பில் சில நிர்வாக காரணங்கள் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு ஒன்றின்படி, ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது போன்ற புதிய விதிகள் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்வு முறை, வயது வரம்பு மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான சில புதிய அரசாணைகளின் விவரங்களையும் இணைக்க தவறியதால், முழுமையற்ற அந்த அறிவிப்பை திரும்ப பெற்று, திருத்தங்களுடன் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே, 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 1, 2-ம் தேதிகளில் இருந்து நவம்பர் 15, 16-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அறிவிப்பே திரும்ப பெறப்பட்டுள்ளதால், தேர்வு மேலும் தள்ளிப் போகுமோ என்ற அச்சம் தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து தேர்வர்கள் கூறுகையில், "பல வருடங்களாக இந்த ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறோம். அரசு ஒரு திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி தேர்வுகளை நடத்த வேண்டும். இப்படி அறிவிப்பை வெளியிட்டு, திரும்பப் பெறுவது எங்களைப் போன்றோரின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிப்பதாகும்" என்று வேதனை தெரிவித்தனர். திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு, அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ