)
Tirunelveli Kavin Murder Politicians Gave Support : திருநெல்வேலியில் கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, ஐ.டி ஊழியர் கவின் தான் காதலித்த பெண்ணின் தம்பியால் படுகாெலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!
தூத்துக்குடி ஆறுமுகமங்களத்தை சேர்ந்த கவின், சென்னையில் ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். சந்திரசேகர்-செல்வி தம்பதியின் மூத்த மகனான இவர், திருநெல்வேலியை சேர்ந்த சுபாஷினி என்கிற சித்த மருத்துவை காதலித்து வந்துள்ளார். இந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறை உதவி ஆய்வாளர் பதவியில் இருந்தவர்கள்.
பள்ளி காலத்தில் சந்தித்த இவர்கள், பின்பு காதலர்களாக மாறியதாக கூறப்படுகிறது. சுபாஷினி நெல்லையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, தனது காதலி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத தாத்தாவை அழைத்து சென்றுள்ளார் கவின். அவருடன் கவினின் தாய் மற்றும் மாமா ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு வந்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், தனியாக பேச வேண்டும் என்று கவினை அழைத்து சென்றுள்ளார். கவினிடம், சுபாஷினியை மறந்து விடுமாறு சுர்ஜித் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கவின் மறுத்ததால் அவர் வெட்டிக்கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கவின் மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதால், அவருடன் தனது சகோதரி உறவு வைத்துக்கொண்டிருப்பது தனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் இப்படி செய்தேன் என்று சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கவின் இறப்பும்-அரசியலும்:
கவின் உயிரிழப்பு, தமிழ் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய மென்பொருள் நிறுவனத்தில், வருடம் ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கும் கவின், தான் படித்த பல்கலைக்கழத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவனாகவும் இருந்துள்ளார். வாழ்க்கையில் கொஞ்சம் செட்டில் ஆகிவிட்டு, தனது காதலி சுபாஷினியை கரம் பிடிக்கலாம் என்று கனவுடன் இருந்துள்ளார். அதற்குள்ளாக, சுபாஷினியின் சகோதரர் இப்படியொரு சம்பவத்தை செய்துள்ளார்.
கவின் இறப்பு குறித்து ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் பெரிதாக பேசவில்லை. இதற்கிடையே சமூக போராளிகள் சிலர் சாதிய வாக்கு வங்கி கெட்டு விடக்கூடாது என அவர்கள் இப்படி பேசாமல் இருப்பதாக குற்றம்சாட்டினர். இதைத்தாண்டி, ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
ஆறுதல் தெரிவித்தவர்கள்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கவினின் தந்தை சந்திரசேகருக்கு செல்போன் மூலம் ஆதரவு தெரிவித்தார். “நாங்க எல்லாம் இருக்கோம், பாத்துக்குறோம்” என்று கூறினார். இதையடுத்து, திமுக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரும் “நாங்கள் இருக்கிறோம்” என்று கவினின் பெற்றோருக்கு தைரியம் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இன்று கவின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். முன்னர் போனில் பேசிய திருமாவளவன், கவின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ