MK Stalin Wrote Letter to 7 State Chief Ministers: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 7 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நேற்று முன்தினம் (மார்ச் 05) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக் கட்சிகளை தவிர்த்து 53 கட்சிகள் கலந்து கொண்டன. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், தென் மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், மற்றும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 1976ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடித்ததால், 84வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருவதாகவும், அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும். அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி.
2026ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும் என்றும் தமது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும், மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும்; தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்ப்பதாகவும் தமது கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறை செய்யும் முறை என்பது எளிமையானது என்றும், இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும், முதல் நேர்வில், தற்போதுள்ள 543 இடங்களை மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்யலாம் என்றும், இரண்டாவது நேர்வில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 800க்கு மேல் அதிகரிக்கப்படலாம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் 2026-க்குப் பிந்தைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், மக்கள்தொகை பெருக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்தியதற்காகவும் நம்மைப் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினையின் தீவிரம் ஒருபுறம் இருக்க, இதுகுறித்து நம்முடைய கவலைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒன்றிய அரசு தெளிவையோ அல்லது உறுதிப்பாட்டையோ அளிக்கவில்லை என்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் தெளிவற்ற முறையில் எல்லை நிர்ணயம் ஒரு "விகிதாச்சார சார்பு" அடிப்படையில், கணக்கீடு பயன்படுத்தப்படும் என்றும் அதன் அடித்தளத்தை விளக்காமல், வெற்று வாய்ச்சொற்கள் மூலம் எந்த மாநிலமும் அதன் தொகுதிகளை இழக்காது என்று கூறுகின்றனர்.
நமது மக்களாட்சியின் அடித்தளமே ஆபத்தில் இருக்கும்போது, இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை நாம் ஏற்கமுடியுமா? நமது மாநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் இது தொடர்பாக, 5.03.2025 அன்று பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தான் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கட்சிகளும் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை கோருவதிலும், நமது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஒன்றுபட்டிருந்தனர் என்று குறிப்பிட்டு, தொகுதி மறுவரையறையின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டுடன், ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து, இந்தியா முழுவதும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாநிலங்களையும் அணுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், தமது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று தாம் நம்புவதாகவும், கூட்டாட்சி கொள்கை என்ற நம்முடைய அடிப்படையான தத்துவத்தைப் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், இப்பிரச்சினையின் அரசமைப்பு ரீதியான, சட்ட மற்றும் அரசியல் ரீதியான பரிமாணங்களை நாம் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் நாட்டின் முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, பின்வரும் இரண்டு கோரிக்கைகளை விடுத்துள்ளார் :
மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த தாம் முன்மொழிவதாகவும், நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருவதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியமான கொள்கைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அளிப்பதற்கும், நமது பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும், மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ