)
தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கு மாணவர்கள் பசியுடன் வரக்கூடாது என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் "முதலமைச்சரின் காலை உணவு திட்டம்". இந்த திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, குழந்தைகளின் கல்வி மற்றும் கற்றலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழகத்தில் இந்த திட்டம் முதற்கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 3.05 லட்சம் மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் பசியை போக்க உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கத்தை, மு.க. ஸ்டாலின் நாளை ஆகஸ்ட் 26 ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித ஜோசப் தொடக்க பள்ளியில் நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதன் முதலில் 2022 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை உணவை வழங்குவதே இதன் நோக்கம். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகரித்துள்ளது என்றும், அவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தியுள்ளது மற்றும் கற்றல் திறனை அதிகரித்துள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்குள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் இதனால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்கள் பள்ளிக்கு பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்கிறது. சத்தான காலை உணவு, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. பசியின்மை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதை தடுத்து, இடைநிற்றல் விகிதத்தை குறைக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலங்கானா போன்ற பிற மாநிலங்களும், இதேபோன்ற திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தொடர்ந்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசின் வெற்றிகரமான பயணத்தில் இந்த காலை உணவு திட்ட விரிவாக்கம் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ