)
தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை தொகை, விடியல் பேருந்து, பெண்களுக்கான சிறப்பு விடுதி என பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் "மகளிர் நன்னிலம் நில உடைமை திட்டம்" உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான பத்திர பதிவு மற்றும் முத்திரை தாள் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரிடையே நில உரிமையை அதிகரிப்பதும், குறிப்பாக அந்த சமூகங்களை சேர்ந்த பெண்களின் சமூக நிலையை உயர்த்தி, அவர்களுக்கு ஒரு நிலையான பொருளாதார பாதுகாப்பை உருவாக்குவதுமே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம், அவர்கள் சமூகத்தில் ஒரு மரியாதையான இடத்தை பெறுவதோடு, அவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ், வாங்கப்படும் நிலத்தின் மொத்த மதிப்பீட்டில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்த மானியத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கி கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மிக முக்கிய மற்றும் சிறப்பம்சம் என்ன வென்றால், மானியத்தில் வாங்கப்படும் நிலத்திற்கான முத்திரை தாள் கட்டணம் மற்றும் பத்திர பதிவு கட்டணம் ஆகியவற்றிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. இது, நிலம் வாங்கும் பயனாளிகளுக்கு நிதி சுமையை குறைக்கிறது.
இந்த திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பதாரர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்கள் இல்லை என்றால், அதே குடும்பத்தை சேர்ந்த ஆண்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அந்த குடும்பம் விவசாயத்தை தொழிலாக கொண்டு இருக்க வேண்டும். அதே போல அவர்கள் நிலமற்றவராக இருப்பது அவசியம். கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிலத்தையும் விற்றிருக்க கூடாது. குறிப்பாக இதற்கு முன்பு TAHDCO திட்டத்தின் கீழ் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்க கூடாது.
இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை, வாங்கிய நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, மாற்றவோ கூடாது. மேலும், நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். தகுதியுள்ள பெண்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் மாவட்டத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தகுதியுள்ள பெண்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ