)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், கரும்பு விவசாயம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பலரும் தங்களது தோட்டங்களில் கருப்பை பயிரிட்டு வருகின்றனர். தமிழக அரசின் சார்பிலும் பொதுமக்களுக்கு கரும்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான மற்றும் ஆதாய விலையுடன், மாநில அரசின் சார்பில் இந்த கூடுதல் ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. இது விவசாயிகளுக்கு அதிகம் உதவும் ஒரு திட்டமாக உள்ளது. குறிப்பாக, 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.349 என்று சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஓர் அளவிற்கு நிதி உதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2 பொதுத்துறை, 16 கூட்டுறவு மற்றும் 22 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் அரவை திறனை முழுமையாக பயன்படுத்தவும், கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, மத்திய அரசின் விலைக்கு மேல் மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வந்தது. ஆனால், 2017 ஆம் ஆண்டு முதல் அந்த முறைக்கு பதிலாக, இந்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம், விவசாயிகளுக்கு நேரடி பணப்பலன் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
தமிழக அரசு இந்த ஊக்கத்தொகையை ஆண்டுதோறும் உயர்த்தி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2020-21 ஆண்டு ரூ.192.50 ஆக இருந்த இந்த ஊக்கத்தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. 2023-24 ஆண்டு ரூ.215 ஆக இருந்த ஊக்கத்தொகை, தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறுவதற்கான நடைமுறை மிகவும் எளிமையானது. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவு, தனியார் அல்லது பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தங்கள் கரும்பை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த ஊக்கத்தொகையை பெற தனியாக எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விவசாயிகள் தங்கள் விளைச்சலை சர்க்கரை ஆலையில் பதிவு செய்தாலே போதுமானது.
அரவை பருவத்தில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சர்க்கரை துறை இயக்குநரகம் மூலம் சரிபார்க்கப்படும். பின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகை நேரடியாக செலுத்தப்படும். இதற்கு ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போதுமானவை. இந்த திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவர்களின் நிதி சுமையையும் குறைக்கிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி மேலும் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ