)
TN School Education Minister Anbil Mahesh : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பாக, தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POSCO) விழிப்புணர்வு பயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POSCO) விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், " பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகூடத்தில் உள்ள தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதேப்போல் பெற்றோர்கள் நம் குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அவர்கள் பார்த்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். பெற்றோர்கள் வைத்த நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இடையூறாக எதெல்லாம் வருகிறது.
சில நேரங்களில் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை சார்ந்த செய்திகள் வரும்பொழுது, அதுசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க POSCO சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் பாலியல் குற்றம் நடைபெற்றால், விசாரணைக்காக காவல் துறை அதிகாரிகள் சீருடையில் வரக் கூடாது. ஆசிரியர்கள் உடனடியாக குழந்தையின் பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 14417 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகத்திரும் இந்த எண்கள் அச்சிடப்பட்டுள்ளது. ஒருசில குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் பேசுவதற்கு அஞ்சுவார்கள். வகுப்பறையில் நன்றாக பேசி, சிரிக்கக்கூடிய மாணவர்கள் தனியாக அமைதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கண்காணித்து, அவர்களை பற்றி பெற்றோர்களிடம் பேச வேண்டும். குழந்தைகளின் மனநிலை மாறுவதை கண்டறிவது ஆசிரியர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்." என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ்நாடு முழுவதும் POSCO சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.4.94 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 90 ஆயிரம் நபர்களுக்கு இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. யாரோ பெற்ற பிள்ளைதானே என்றில்லாம், நம் பிள்ளைக்கு அந்த நிலைமை வந்தது என்று சொன்னால் நாம் எப்படி வெகுண்டு எழுவோமோ அதைவிட இரண்டு மடங்கு வெகுண்டு எழுந்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 கோடியே 29 இலட்சம் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்திட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இனி எங்கள் பள்ளியில் பாலியல் குற்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காத வண்ணம் செயல்படுவோம் என்று ஆசிரியர்கள் உறுதியுடன் செல்ல வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ