)
TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்கள் குறைவாக இருப்பதாக பரவி வரும் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை, 2022 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களுடன் ஒப்பிடக்கூடாது என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது. ஏனென்றால், 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வரைவாளர், நில அளவர் காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பட்டதாகவும், இப்போது அந்த காலிப் பணியிடங்கள் தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால், அந்த பணிகள் குரூப் 4 தேர்வில் இல்லாததால், குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல் தோன்றுவதாக டிஎன்பிஎஸ்சி தங்களுடைய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி விளக்கத்துக்கு காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டுக்காகன டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடந்தது. இதனை தமிழ்நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருகின்றனர். இப்போது தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்வுக்கு வெளியிடப்பட்டிருக்கும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை தான். இந்த தேர்வு அறிவிப்பு வெளியானபோது விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 3,935 காலிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கலந்தாய்வுக்கு முன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால், மிக குறைவான காலிப் பணியிடங்களே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் அதிருப்தி
இது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். குறைந்தபட்சம் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இம்முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வினாத்தாளும் மிக கடினமாக இருந்ததால், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையையாவது அதிகரிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 4456 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025- ம் ஆண்டில் கூடுதலாக 896 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது." என தெரிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் குறித்த விளக்கம்
குரூப் 4 காலிப் பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி கொடுத்துள்ள விளக்கத்தில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) 2022-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை வருவாய்த்துறையிலுள்ள வரைவாளர் (Draftsman) மற்றும் நில அளவர் (Field Surveyor) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட்டது. 2022-ஆம் ஆண்டு முதல் வரைவாளர் (Draftsman) மற்றும் நில அளவர் (Field Surveyor) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே 2022 ஆண்டிற்கு முன்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -தொகுதி IV பணிகள் தேர்வு மூலம் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையுடன், 2025-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை ஒப்பிட இயலாது." என கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ